Published : 25 Sep 2013 11:00 AM
Last Updated : 25 Sep 2013 11:00 AM

இலங்கையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்கக் கோரி காரைக்காலில் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை விடுவிக்கவும், விடுவிக்கப்பட்ட 13 மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்கவும், துரித நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் தூதரக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 26ந்தேதி வியாழக்கிழமை நடைபெறும்.

தரப்படாத படகுகள்

அண்மையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 30.7.2013 ல் கைது செய்யப்பட்டனர். அவர்களது மூன்று படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. நீதிமன்ற விசாரணை முடிந்து அவர்கள் விடுவிக்கப்பட்டும், அவர்களது படகுகள் விடுவிக்கப்பட வில்லை. இதன் காரணமாக, தங்களுடைய மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில் அவர்களுக்கு மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மீனவர்கள் அவதி

இதே நிலை தான் காரைக்கால் மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 30.7.2013 அன்று காரைக்காலைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 13 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிமன்ற விசாரணை முடிந்தும் அவர்களுடைய படகுகளை இலங்கை அரசு இன்னமும் தரவில்லை.

அண்மைக் காலமாக, இந்திய மீனவர்களை விடுதலை செய்துவிட்டு, அவர்கள் வசம் இருக்கும் படகுகள், வலைகள் ஆகியவற்றை இலங்கை அரசு பறிமுதல் செய்துவிடுகிறது.

இதன்மூலம், இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலையே தடுத்துவிடலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறதோ என்ற எண்ணம் மீனவ மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், இந்திய தூதரகத்தின் மூலம் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்குமேயானால், இந்திய மீனவர்களை குற்றவாளிகள் போல் நடத்தப்படுவது தடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்திய மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் உடனடியாக திருப்பித் தரக்கூடிய நிலை ஏற்படும். ஆனால், இதுபோன்ற உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.

ஆர்ப்பாட்டம்

இந்தப் பிரச்சனையில் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் 26.9.2013 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக மீனவர் பிரிவுச் செயலாளர் கலைமணி தலைமையிலும், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.ஓமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இதில் அனைத்துத் தரப்பினரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x