Published : 27 Mar 2014 11:37 AM
Last Updated : 27 Mar 2014 11:37 AM
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு புதன்கிழமை தொடங்கியது. தேர்வு நேரம் மாற்றப்பட்டதால் தேர்வு மையத்துக்கு முன்கூட்டியே வருவதில் சிரமம் இருந்ததாக மாணவ-மாணவிகள் கவலை தெரிவித்தனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஆரம்பம்
பிளஸ்-2 தேர்வு செவ்வாய்க் கிழமை முடிவடைந்த நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு புதன்கிழமை தொடங்கியது. இதுநாள் வரையில் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடையும்.
ஆனால், இந்த ஆண்டு முதல்முறையாக தேர்வு, வழக்கமான நேரத்தை காட்டிலும் 45 நிமிடங்களுக்கு முன்பாக அதாவது காலை 9.15 மணிக்கு தொடங்கும் என்றும், 10 நிமிடம் வினாத்தாளை படித்துப் பார்க்கவும், 5 நிமிடம் விடைத்தாள் விவரங்களை சரிபார்க்கவும் கால அவகாசம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காலை 9.15 மணிக்கே தொடங்குவதால் தேர்வு மையத்துக்கு வருவது சற்று சிரமமாக இருப்பதாக மாணவ-மாணவிகள் கவலை தெரிவித்தனர். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிலர் கூறுகையில், “காலை 9.15 மணிக்கு தேர்வு தொடங்குவதால் நாங்கள் 8 மணிக்கெல்லாம் இங்கு வந்துவிட வேண்டும். பஸ்ஸில் வருவோராக இருந்தால் 7 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டால்தான் உரிய நேரத்தில் வர முடியும்.
6 மணிக்கு எழுந்து தயாரானால்தான் 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்ப இயலும். இதனால், காலை உணவு சாப்பிடுவது சிரமம். பஸ்ஸைப் பிடித்து 8 மணிக்கு வந்துவிட்டோம் என்றாலும் தேர்வு முன்கூட்டியே தொடங்குவது சற்று சிரமமாகத்தான் இருக்கிறது” என்று தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளைக் காட்டிலும் கிராமப்புறங்களில் தொலைவான இடத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் தேர்வு நேர மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கோடை வெயிலை கருத்தில் கொண்டுதான் 10-ம் வகுப்பு தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறதே தவிர, வேறு எவ்விதமான காரணமும் இல்லை” என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT