Published : 11 Oct 2013 06:57 PM
Last Updated : 11 Oct 2013 06:57 PM

கல்லூரி முதல்வரை கொலை செய்தது ஏன்?- கைதான மாணவர்கள் வாக்குமூலம்

மாணவர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை கையாண்டதால், கல்லூரி முதல்வரை கொலை செய்தோம் என கைதான மாணவர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாட்டில் உள்ள இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் (53). இவரை அதே கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வைத்தே வெட்டி கொலை செய்தனர்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக அக்கல்லூரியில், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த பூல்பாண்டி மகன் பிச்சைக்கண்ணு (21), சிவகங்கை மாவட்டம் ஒக்கூரை சேர்ந்த ஜார்ஜ் மகன் டேனிஸ் (22), நாகப்பட்டனம் நீலம்பாடியைச் சேர்ந்த மனோகரன் மகன் பிரபாகரன் (21) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் மூவரிடமும் முறப்பநாடு போலீஸ் ஆய்வாளர் (பொறுப்பு) செல்வம் விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக போலீஸாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலம் விவரம்:

“நாங்கள் மூவரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே ஒரு அறை எடுத்து தங்கியிருந்து, கல்லூரிக்கு சென்று வந்தோம். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பஸ்ஸில் செல்லும்போது மாணவிகளை கிண்டல் செய்தது தொடர்பாக, எங்களுக்கும், வேறு சில மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த விவகாரம், கல்லூரி முதல்வர் சுரேஷுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவர் எங்கள் மூவரையும் கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த நாங்கள் எங்களை பற்றி முதல்வரிடம் போட்டுக் கொடுத்த மாணவர்களுடன், கல்லூரி வளாகத்தில் வைத்தே தகராறு செய்தோம்.

இதனால், பிச்சைக்கண்ணுவை கல்லூரி முதல்வர் சுரேஷ் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தார். இதனால், நாங்கள் மூவரும் முதல்வரைச் சந்தித்து சஸ்பெண்டை ரத்து செய்யுமாறு கேட்டோம். ஆனால், அவர் மறுத்துவிட்டதோடு, மற்ற இருவரையும் சஸ்பெண்ட் செய்துவிடுவேன் என மிரட்டினார்.

கல்லூரியில் மாணவர்களிடம் கடுமையான அடக்குமுறையில் அவர் ஈடுபட்டு வந்தார். கல்லூரிக்கு தாமதமாக வந்தால் ரூ.1,000 அபராதம் கட்ட வேண்டும் என வற்புறுத்துவார். எந்தப் பிரச்சினை என்றாலும் அடிக்கடி பெற்றோரை அழைத்து வரச்சொல்வர். பெற்றோர் முன்னிலையில் எங்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டுவார்.

அவரது அடக்குமுறை அதிகமானதால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். அதன்படி வியாழக்கிழமை அரிவாள்களுடன் கல்லூரிக்கு சென்று, காரில் வந்து இறங்கிய அவரை வெட்டி கொலை செய்தோம்” என்றனர் அவர்கள்.

மூவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்திய பிறகு, வியாழக்கிழமை இரவில் திருவைகுண்டம் நீதித்துறை நடுவர் நம்பிராஜன் இல்லத்தில் ஆஜர்படுத்தி, திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரியில் உள்ள பாஸ்டல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x