Published : 22 Sep 2013 02:16 PM
Last Updated : 22 Sep 2013 02:16 PM

இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்த வேண்டும்

இலங்கை-இந்திய கடல் பகுதிகளுக்கிடையே உள்ள சர்வதேச கடல் எல்லைப் பகுதி பிரச்சினையை ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட பிரச்சினையாக மத்திய அரசு கருதுவது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

தமிழகம் மற்றும் இலங்கை மீனவர் அமைப்புகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரி, பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். இந்த பேச்சுவார்த்தை, சென்னையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:

தாக்குதல்கள்

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கை அரசுக்கு தாரை வார்த்த மத்திய அரசின் தவறான ஒப்பந்தமே அதற்குக் காரணம். இந்த வரலாற்றுத் தவறு தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு பாக் ஜலசந்தி பகுதியில் தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தீர்வு

இலங்கை-இந்திய கடல் பகுதிகளுக்கிடையே உள்ள சர்வதேச கடல் எல்லைப் பகுதி பிரச்சினையை ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட பிரச்சினையாக மத்திய அரசு கருதுகிறது. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு இப்படியொரு நிலையை கொண்டிருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. கச்சத்தீவை மீட்பதே இதற்கு தீர்வாக அமையும்.

தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில் அரசியல்ரீதியாகவும், ராஜாங்க அளவிலும், மத்திய அரசு தாமதமாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுவும் தமிழகம் பலமுறை ஓங்கி குரல் கொடுத்தால்தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வருகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 754 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்சினையைத் தீர்க்க பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வந்தாலும் அவையனைத்தும் பெரிய அளவில் பயன் தருபவையாக இல்லை.

பேச்சுவார்த்தை

இந்திய வெளியுறவுத் துறையும், கடலோரக் காவல் படையும், இலங்கை கடற்படையினரைக் கண்டிக்காமல், அவர்களது செயல்பாடுகள் சரி என்பதை ஒப்புக் கொள்வது போன்றதொரு கருத்தைக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களுடன் இப்பிரச்சினை குறித்து பேசித் தீர்த்துக் கொள்ள முன்வந்துள்ளனர்.

வேண்டுகோள்

இலங்கை கடற்படை தாக்குதல் காரணமாக கடலோர மாவட்டங்களில் பதற்றமான நிலை நிலவி வந்தாலும், தமிழக மீனவர்கள், இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று மாநில அரசிடம் முறையிட்டுள்ளனர். எனவே, அவர்களது கோரிக்கையை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்.

தமிழக மீனவர்களை தாக்காமல் இருப்பது, அவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் அபகரிக்காமல் இருப்பது, காலம் காலமாக மீன் பிடித்துவரும் பகுதிகளில் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிப்பது, சிறையில் இருப்பவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது விவாதிக்க வேண்டும்.

சென்னையில் டிசம்பரில்...

மேலும், கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் உரிமை பற்றி தமிழக அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு பாதிக்கப்படாமல், பேச்சுவார்த்தை அமைய வேண்டும். ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எட்டப்படும் தீர்மானங்கள், தமிழக அரசு ஒப்புதலுடனேயே செயல்படுத்தப்பட வேண்டும்.

எனவே, மீனவர்களிடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்த பிரச்சினையை பேசித் தீர்க்க அனுமதிக்க வேண்டும். இந்த கூட்டம், சென்னையில் வரும் டிசம்பர் மாதம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x