Published : 13 Nov 2013 05:34 PM
Last Updated : 13 Nov 2013 05:34 PM

நவ. 15-ல் ரயில் மறியல்: திருமாவளவன் அறிவிப்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தலைமையிலான குழு பங்கேற்பதை கண்டித்து 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், “காமன்வெல்த் மாநாட்டில், இந்தியாவின் சார்பில் எவரும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த நிலையிலும் இவை எவற்றுக்கும் மதிப்பளிக்காமல் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையிலான குழு காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தக் கண்டனத்தை வெளிப்படுத்தும்வகையில், வரும் 15ம் தேதிதமிழகமெங்கும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x