Published : 20 Jun 2015 08:26 AM
Last Updated : 20 Jun 2015 08:26 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்க மாட்டோம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கும் மாண வர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்க மாட்டோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கைக் கான கலந்தாய்வில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளது. இதனால், கடந்த ஆண்டு 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்தாய்வில் பங்கேற்ற உள்ளதால், இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மருத்துவப் படிப்பில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

மனுவில், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் முறையே 2710, 1693, 652 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் வினாத்தாள் கடினமாக இருந்ததால் 124 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். மருத்துவப் படிப்புக்கான மொத்த இடங்கள் 2,808. ஆனால், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்ற 4,679 பேர் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே, இந்தாண்டு நடத்தப்படும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் கடந்தாண்டு மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

மேல்முறையீடு

இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்திய நாராயணன், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பழைய மாணவர்கள் கலந்து கொள்வது இவ்வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டதாகும்’ என உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 62 மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இம்மனு நீதிபதிகள் சதீஷ் அக்னிஹோத்ரி, வேணுகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடத்தி னாலும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கு வதை ஏன் நிறுத்தி வைக்கக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இவ்விவகாரத்தில் அரசின் நிலை குறித்து கேட்டு வெள்ளிக் கிழமை தெரிவிப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப் போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, 2,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மொத்தம் 31,525 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 4,679 பேர் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்கள். இதில், 548 பேருக்கு இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், 50 சதவீத இடங்கள் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு கிடைக்கும் என மனுதாரர்கள் தரப்பில் கூறுவது நியாயமற்றது. இதேபோல், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தாராளமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதையும் ஏற்க முடியாது. இதுதொடர்பாக, மனுதாரர்கள் தரப்பில் ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் வெகுதொலைவில் இருந்து வந்துள்ளனர். அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது” என வாதிட்டார்.

கலந்தாய்வுக்கு தடையில்லை

இதைக் கேட்ட நீதிபதிகள், வரும் திங்கட்கிழமை வரை மாணவர்கள் யாரையும் சேர்க்கக் கூடாது. ஆனால், கலந்தாய்வுக்கு தடை விதிக்கவில்லை. கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெறலாம். ஆனால், வழக்கின் உத்தரவு வரும் வரை மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கக் கூடாது” என உத்தரவிட்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, வரும் திங்கட்கிழமை வரை மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்க மாட்டோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x