Published : 18 Sep 2013 09:33 PM
Last Updated : 18 Sep 2013 09:33 PM

பொய் வழக்குகளுக்கு அச்சப்பட மாட்டேன்: விஜயகாந்த்

தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தஞ்சை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரான தேமுதிக தலைவர் விஜயகாந்த், தாம் பொய் வழக்குகளுக்கு அச்சப்பட்டது இல்லை என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தஞ்சையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக, தஞ்சாவூர் அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்குரைஞர் குப்புசாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 8 முறை வாய்தா வாங்கி, நீதிமன்றத்தில் ஆஜராவதை விஜயகாந்த் தவிர்த்து வந்தார். இதையடுத்து நீதிபதி சேதுமாதவன், பிணையில் வரக்கூடிய பிடியாணை பிறப்பித்ததையடுத்து, புதன்கிழமை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜரானார். அப்போது, அவரது வழக்குரைஞர் அளித்த பிடியாணையை ரத்து செய்யக்கோரும் மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், முதல்வரை அவதூறாகப் பேசியதாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு, அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதாக விஜயகாந்த் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நவம்பர் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

வழக்கு விசாரணைக்குப் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் விஜயகாந்த் கூறுகையில், “கடந்த ஆண்டு மக்களுக்காக மக்கள் பணி என்ற கூட்டத்தில், நான் கன்யாகுமரியிலோ நாகர்கோயிலிலோ பேசியிருக்கிறேன். அதுதொடர்பாக இப்போது விசாரிக்கிறார்கள். பொய் வழக்குகள் பற்றியெல்லாம் நானோ, எனது கட்சியினரோ பயப்படமாட்டோம்.

என் மீதும், என் கட்சியினர் மீதும் 50 முதல் 60 வழக்குகள் வரை தொடர்ந்திருக்கிறார்கள். எல்லாமே பொய் வழக்கு. எல்லாவற்றையும் சந்திக்க வேண்டிய நேரத்தில் சந்திப்பேன்.

இவை அனைத்தையும் கட்சியினரையும் மக்களையும் பார்ப்பதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன். ராஜ மரியாதையாகவும், போலீஸ் பாதுகாப்புடனும் வந்திருக்கிறேன். இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்?” என்றார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x