Published : 19 Sep 2013 09:17 PM
Last Updated : 19 Sep 2013 09:17 PM

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: கருணாநிதி கேள்வி

அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டாமென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 'ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய வழக்கறிஞர் பவானி சிங்கை, அந்தப் பதவியில் நீடிக்க வேண்டுமென்று குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவே திரும்பத் திரும்ப பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்.

திமுக பொதுச் செயலாளர் சார்பில் 23-8-2013 அன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், விசாரணையின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்படுவதால், அவரை நீக்கிவிட்டு புதிய வழக்கறிஞரை, அரசு வழக்கறிஞராக நியமனம் செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, கர்நாடக அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கிடையில், அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து பவானி சிங்கை நீக்கிவிட்டதாக, கர்நாடக மாநிலச் சட்டத் துறைச் செயலாளர் நாகராஜா 25-8-2013 அன்று உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் “ரிட்” மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் சவுஹான் மற்றும் போப்படே ஆகியோர் புதிய வழக்கறிஞரை நியமனம் செய்ய அனுமதி வழங்கியதுடன், ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து, 7-9-2013 அன்று உத்தரவிட்டனர்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங் அரசு சார்பாக ஆஜராக வலியுறுத்த வேண்டாம் என்று 10-9-2013 அன்று கர்நாடக அரசு கூறியது. அதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் 11-ம் தேதி மனுத் தாக்கல்

செய்யப்பட்டது. கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்று, பவானி சிங் விசாரணையில் ஆஜராகக் கூடாது என்று பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதற்கிடையில் கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணையில், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வக்கீல் பவானி சிங்கை கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒப்புதலோடு முறைப்படி நீக்கம் செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் தற்போது ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் புதிதாக இரண்டு மனுக்களை கடந்த 18-9-2013 தாக்கல் செய்திருக்கிறார். அதாவது, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவை தொடர்ந்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென்றும், புதிய நீதிபதியை நியமிக்க இடைக்காலத்

தடை விதிக்க வேண்டுமென்றும், பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு முன்பு மல்லிகார்ஜுனய்யாவும் ,வேறு சிலரும் நீதிபதிகளாக இருந்தபோது அவர்களே தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கேட்காத ஜெயலலிதா, தற்போது மட்டும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பது ஏன்?

அதுபோலவே அரசு வழக்கறிஞராக ஆச்சார்யா பதவி விலகியபோது, அவர் பதவி விலக வேண்டாமென்றும், தொடர்ந்து அந்த வழக்கிலே அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்காதது ஏன்?

எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? குற்றவாளியே தன்மீதான வழக்கை குறிப்பிட்ட நீதிபதிதான் தொடர்ந்து விசாரிக்க வேண்டு மென்றும், தனக்கு எதிராக வாதாடக்கூடிய அரசு வழக்கறிஞராக குறிப்பிட்ட ஒருவரே இருக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கும் விநோதம் இதுவரை எந்த வழக்கிலாவது நடந்தது உண்டா?’ என்று கருணாநிதி தன் அறிக்கையில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x