Published : 14 Oct 2014 11:53 AM
Last Updated : 14 Oct 2014 11:53 AM

நடைபாதைவாசிகளுக்கு வீடுகள் கட்டித் தாருங்கள்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சாலை விபத்துக்களுக்கு காரணமான மதுவை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும், நடைபாதைவாசிகளுக்கு வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை வேளச்சேரி - தரமணி 100 அடி சாலையில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஏழைகள் மீது நேற்று அதிகாலை > தாறுமாறாக ஓடிய மகிழுந்து ஏறியதில் கருவுற்ற பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இச்செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மகிழுந்தை ஓட்டியவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் நடைபாதையில் உறங்குபவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலை தான் காணப்படுகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டும் மனித மிருகங்களின் தவறுக்கு பலியாவது இந்த அப்பாவிகள் தான்.

பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னை அசோக் நகர் உதயம் திரையரங்கம் அருகே சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வாகனம் மோதி 6 பேர் உயிரிழந்தனர். அதன்பின் ஆண்டுக்கு ஒருமுறையாவது இத்தகைய விபத்து நடப்பது வாடிக்கையாகிவிட்டது. பல நேரங்களில் இத்தகைய விபத்துக்கள் மூடி மறைக்கப்படுகின்றன; விபத்துக்கு காரணமானோர் தப்பிக்க விடப்படுகிறார்கள் என்பது தான் வருத்தமளிக்கும் உண்மையாகும்.

சாலையோரங்களில் உறங்குவோரின் உயிர்கள் போதை ஓட்டுனர்களால் பறிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்கள் மதுவும், வறுமையும் தான் என்பதை மறுக்க முடியாது. சாலை விபத்துக்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இவ்விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் மது அரக்கன் தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

கடந்த 2013 ஆம் ஆண்டில் 718 பேரும், 2012 ஆம் ஆண்டில் 731 பேரும், 2011 ஆம் ஆண்டில் 575 பேரும் குடிபோதையால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இந்த உண்மைகளை எல்லாம் அறிந்திருந்தும் மது அரக்கனை ஒழிக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இரவு நேரங்களில் எவரேனும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா? என்பதை அறிய காவலர்கள் வாகன சோதனை நடத்துகின்றனர். ஆனால், பெயரளவுக்கு ஒரு சில மணிநேரம் மட்டும் வாகன சோதனை நடத்திவிட்டு காவலர்கள் கலைந்து சென்று விடுவது தான் இத்தகைய விபத்துக்களுக்கு காரணம் ஆகும். விபத்துக்கு காரணமான மகிழுந்து வந்த பாதையில் முறையாக வாகன சோதனை நடத்தப்பட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது; 3 அப்பாவிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

அனைத்து நெடுஞ்சாலைகளிலும், உட்புற சாலைகளிலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோரை சோதனை நடத்தி கண்டுப்பிடிப்பதற்காக தமிழக காவல்துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதன் விளைவு தான் அப்பாவிகளின் உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் 2586 குடும்பங்களைச் சேர்ந்த 11,116 பேர் நடைபாதைகளில் வாழ்வதாக தெரியவந்திருக்கிறது. இவர்கள் தவிர பெருமளவிலான தனிநபர்களும் நடைபாதையிலேயே வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்தால் நடைபாதைவாசிகளின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டும். நடைபாதைகள் பாதுகாப்பற்றவை என்பதை அறிந்திருந்திருந்த போதிலும் அவர்கள் நடைபாதைகளில் வாழ்வதற்கான காரணம் வறுமை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை.

தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகப்போகிறது; அனைவருக்கும் வீடு வழங்குவோம் என ஆட்சியாளர்கள் ஆண்டுக்கு ஆண்டு முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், சென்னையில் மட்டும் 15,000 பேர் குடும்பங்களுடன் நடைபாதைகளில் ஆபத்தான சூழலில் வாழ்கிறார்கள் என்பதே தமிழ்நாடு எந்த திசையை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆகும்.

டெல்லி போன்ற நகரங்களில் வீடு இல்லாத மக்கள் தங்குவதற்காக 185 இரவு நேர தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சென்னையில் இத்தகைய 30 விடுதிகள் இருக்கும் போதிலும் அவை பயனின்றி முடங்கிக் கிடக்கின்றன. அரசின் அலட்சியம் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள் பறிபோவதை இனியும் அனுமதிக்கக் கூடாது. எனவே, சாலை விபத்துக்களுக்கு காரணமான மதுவை அடியோடு ஒழிக்கவும், நடைபாதைவாசிகளுக்கு வீடுகளைக் கட்டித் தரவும், வறுமையை ஒழிக்கும் வகையில் வேலைவாய்ப்புகளை பெருக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x