Published : 18 Sep 2013 09:58 PM
Last Updated : 18 Sep 2013 09:58 PM

சொத்துக் குவிப்பு வழக்கு: கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜெ. மனு

தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்குரைஞர் பவானி சிங் நீக்கப்பட்டதாக‌ கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா, இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ளார். இதனால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, தற்போது வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பாலகிருஷ்ணாவே தொடர்ந்து வழக்கை விசாரிக்க அனுமதிக்க‌ வேண்டும். இதற்காக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும். வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதிய நீதிபதியை நியமித்தால் தீர்ப்பு வெளியாவது தாமதமாகும். அதே போல வழக்கு நேர்மையாக நடக்கவும் வாய்ப்பு இருக்காது. எனவே புதிய நீதிபதியை கர்நாடக அரசு நியமிக்கக்கூடாது.

வழக்கில் இறுதி வாதம் முடியும் தருவாயில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் இனி மேல் ஆஜராகக் கூடாது என கர்நாடக அரசு திடீரென‌ உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில், பெங்களூர் உயர்நீதி மன்றத்திலும் வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், கர்நாடக அரசு அவரை நீக்கி இருப்பதன் பிண்ணனியில் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. எனவே கர்நாடக அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்குரைஞராக ஆஜராகி வந்த‌ பவானி சிங்கை கர்நாடக அரசு திடீரென கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நீக்கியது. இதனால் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பவானி சிங்கின் நீக்கத்துக்கு தடை விதிக்கமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசின் உத்தரவிற்கு தடைவிதிக்க‌ மறுத்தது. இது குறித்து கர்நாடக அரசு அம்மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்துமாறும் உத்தரவிட்டது.

அதன்படி கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடக அரசு, பவானி சிங்கை நீக்குவதாக கடந்த 17-ஆம் தேதி புதிய அரசாணையை வெளியிட்டது. இதனால் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை இம்மாதம் 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள‌து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x