Published : 20 Jun 2015 08:53 AM
Last Updated : 20 Jun 2015 08:53 AM

கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த காரைக்கால் மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த வை.மூர்த்தி(53), மூ.சுதர்சன்(17), முகமது(50) ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் தங்கி, மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை மூவரும் அங்கிருந்து ஃபைபர் படகில் கடலுக்குச் சென்று, கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அன்று மாலை அவர்களது படகில் திடீரென ஓட்டை விழுந்தது. படகில் தண்ணீர் புகுந்ததால், சிறிது நேரத்தில் படகு கவிழ்ந்தது.

இதனால் கடலில் விழுந்த மீனவர்கள், கவிழ்ந்த படகைப் பிடித்துக் கொண்டு தவித்தனர். இரவு முழுவதும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை, நேற்று காலை மற்றொரு படகில் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால் மீனவர்கள் மீட்டு, தங்களது படகு மூலம் கோடியக்கரைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களுக்கு கோடியக்கரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் காரைக்காலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x