Published : 01 May 2014 11:54 AM
Last Updated : 01 May 2014 11:54 AM

குண்டுவெடிப்பு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் தமிழக மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி விரைவு ரயிலில் இன்று காலை நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்பில் ஸ்வாதி என்ற இளம் பெண் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 14 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மனித குலத்திற்கு எதிரான இந்த குண்டுவெடிப்புத் தாக்குதலை பா.ம.க. கடுமையாக கண்டிக்கிறது.

குண்டுவெடிப்பின் பின்னணி தெரியாத நிலையில் அது குறித்து கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது. ஆனால், பாகிஸ்தான் உளவு அமைப்பின் முகவராக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறை அறிவித்த 24 மணி நேரத்திலேயே இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி வெடிகுண்டுடன் ரயில் நிலையத்திற்குள் நுழையும் அளவுக்கு பாதுகாப்பு மிக மோசமாக இருந்திருப்பதும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த இளம்பெண் ஸ்வாதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் காயமடைந்த அனைவரும் விரைவாக உடல் நலம் பெற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அனைவருக்கு தரமான சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அதேநேரத்தில் குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.5000 முதல் ரூ.25,000 வரையும் நிதி உதவி அறிவிக்கப்பட்டிருப்பது போதுமானதல்ல.

ரயில் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிதி உதவியாக வழங்கப்பட்டு வரும் நிலையில், அதே அளவிலான நிதி உதவியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கும் வழங்க மத்திய அரசு முன்வரவேண்டும்". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x