Last Updated : 25 Sep, 2018 08:02 PM

 

Published : 25 Sep 2018 08:02 PM
Last Updated : 25 Sep 2018 08:02 PM

இன்சூரன்ஸ் பெற போலி ஆவணங்கள் மூலம் மோசடி: எஸ்.ஐ, ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு ஓராண்டு சிறை

இன்சூரன்ஸ் பெறுவதற்காக வாகனத்தை மாற்றிய வழக்கில் காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற போக்குவரத்து ஆணையர் உள்பட 3 பேருக்கு தலா ஆறுமாதம் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி அண்ணாநகரைச் சேர்ந்தவர் வீரராகவன் ஓய்வுபெற்ற போக்குவரத்து துணை ஆணையர். இவரது மகன் கருணாகரனும், அவரது நண்பர் முத்துக்குமாரும் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கம்பி ஏற்றிச் சென்ற மற்றொரு வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் 2004-ம் ஆண்டு நடைபெற்றது. இச்சம்பவத்தில் முத்துக்குமாரின் கண்கள் முழுவதும் பாதிக்கப்பட்டு பார்வை இழந்தார். இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விபத்துக்காக ரூ.62 லட்சம் இழப்பீடாக இன்சூரன்ஸ் கம்பெனியில் கேட்கப்பட்டது. இதுகுறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் அளித்த புகாரில் பேரில் சிபிஐ போலீஸார், புதுச்சேரி வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது விபத்திற்குக் காரணமான கருணாகரன் மோட்டார் சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் இல்லாததால், ஆதாயம் பெறுவதற்காக அவரது நண்பர் மோட்டார் சைக்கிள் நம்பரை மாற்றிக் கொடுத்து வழக்குப் பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. இதற்கு அப்போதைய போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, தலைமைக் காவலர் கலியபெருமாள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்ததாக முத்துக்குமார், கருணாகரன், வீரராகவன், கலியபெருமாள், சுந்தரமூர்த்தி ஆகியோர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு மீதான விசாரணை புதுச்சேரி தலைமை நீதிபதி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தனபால், குற்றசாட்டபட்ட 5 பேரும் குற்றவாளிகள் என்று இன்று தீர்ப்பு அளித்தார்.

பின்பு போலீஸார் கலியபெருமாள், சுந்தரமூர்த்தி ஆகியோருக்கு தலா ஓராண்டும், குற்றம் சாட்டப்பட்ட வீரராகவன், கருணாகரன், பார்வை இழந்த முத்துக்குமார் ஆகியோருக்கு தலா ஆறு மாதங்களும் சிறை தண்டனையுடன் ரூ.1000 அபராதம் விதித்தார்.

குற்றவாளிகளான சுந்தரமூர்த்தி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கலியபெருமாள் தற்போது புதுச்சேரி வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x