Last Updated : 10 Sep, 2018 12:07 PM

 

Published : 10 Sep 2018 12:07 PM
Last Updated : 10 Sep 2018 12:07 PM

புதுச்சேரியில் அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீச்சு; கண்ணாடி உடைப்பு

 

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தின் போது இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்கியதில் பேருந்தின் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் தமிழக அரசுப் பேருந்து காரைக்கால் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது பேருந்தின் பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நெல்லித்தோப்பு சந்திப்பு அருகே பேருந்தின் பின் பக்கம் உள்ள கண்ணாடி மீது கல் வீசி தாக்கினர். இதில் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் இறக்கி விட்டு பணிமனைக்கு பேருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் பேருந்து மீது கல் வீசிய சம்பவம் தொடர்பாக உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர், இளைஞர் காங்கிரஸார், இடது சாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க நகரின் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

முழு அடைப்பின் போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது தகுந்த ஆதாரத்துடன் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர் காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியினை மேற்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநர் உத்தரவிட முடியாது: நாராயணசாமி

பந்த் குறித்து அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட முடியாது. அவரது எல்லைக்குள் தான் செயல்பட வேண்டும். அவருக்கு கருத்து இருந்தால் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தான் கூற முடியும். தனியாக உத்தரவிட முடியாது என பலமுறை சுட்டிகாட்டியுள்ளோம். மத்திய அரசிடம் புகாரும் செய்துள்ளோம். இது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருக்கிறோம் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x