Last Updated : 26 Mar, 2018 06:19 PM

 

Published : 26 Mar 2018 06:19 PM
Last Updated : 26 Mar 2018 06:19 PM

நியமன எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு, உள்துறைக்கு விரைவில் அறிக்கை: கிரண்பேடி

நியமன எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, உள்துறைக்கு அறிக்கை அனுப்புவேன் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையினுள் மூன்று பாஜக நியமன எம்எல்ஏக்களும் அனுமதிக்கப்படவில்லை. பேரவையில் உரையாற்றிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தீர்ப்பு நகல்களுடன் வந்த பின்னரும், பேரவைக்குள் அவர்களை விடாமல் தடுத்தது யார் என்பது தொடர்பாக தலைமைச் செயலரிடம் விளக்கம் கேட்டுள்ளேன். தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். அவர்களது விளக்கத்துக்குப் பின்னர், இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய உள்துறைக்கு அறிக்கை அனுப்புவேன் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாஜக நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், செல்வகணபதி ஆகியோர் ராஜ்நிவாஸ் சென்று ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்தனர்.

அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சாமிநாதன் கூறுகையில், "உயர் நீதிமன்றத் தீர்ப்பு மீறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x