Published : 03 Sep 2014 08:56 AM
Last Updated : 03 Sep 2014 08:56 AM

எம்.ஏ.எம்.ராமசாமி கையில் மீண்டும் அதிகாரம்?: ஆலோசனை நடத்தும் அரண்மனை உறவுகள்

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராம சாமியை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவது குறித்து செட்டி நாட்டு அரசர் குடும்பத்தில் தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருப்ப தாகச் சொல்லப்படுகிறது.

செட்டிநாட்டு குழுமங்களின் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்காமல் இருப்பதற்காக கம்பெனிகளின் பதிவாளர் மனு நீதிச் சோழனுக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொழிலதி பர் எம்.ஏ.எம்.ராமசாமி மீது அண்மை யில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப் பட்ட மனுநீதிச் சோழனிடம் 3 நாள் விசாரணை நடத்த சிபிஐக்கு நீதி மன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

இந்த வழக்கின் போக்கை உன்னிப்பாக கவனித்து வரும் செட்டியார் சமூகத்து விஐபிக்கள், மீண்டும் எம்.ஏ.எம்.ராமசாமியை அதிகார மையத்துக்கு கொண்டு வருவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் செட்டிநாட்டு அரண்மனை வட்டா ரங்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது:

எண்பது வயது வரை ராஜாவாக வாழ்ந்த எம்.ஏ.எம். ராமசாமியை 83 வயதில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியாக்கி விட்டார்கள். இதுவரை செட்டிநாட்டு அரண் மனைக்குள் விருந்துக்காக மட்டுமே போலீஸ் நுழைந்திருக்கிறது. எம்.ஏ.எம்-முக்கு வலதுகரமாக இருந்த வம்பரம்பட்டி சிவசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். அப்போதைய எஸ்.பி. செந்தில்வேலன், செட்டிநாட்டு அரண்மைக்கே வந்து முக்கிய நபர் ஒருவரை கைது செய்ய முயற்சித்தார். ஆனால், எம்.ஏ.எம்-மின் அதிகாரத்தை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில், தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் முதல்முறையாக செட்டி நாட்டு அரண்மனைக்குள் கால் பதித்திருக்கிறார்கள்.

ராஜா குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் விஐபி ஒருவர் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே எம்.ஏ.எம். மீதான கைது நடவடிக்கை ஒத்திப் போடப்பட்டதாகச் சொல்கிறார் கள். அவருக்கு எதிராக ஏவிவிடப் பட்டுள்ள நடவடிக்கைகளால் ஏ.சி.முத்தையா உள்ளிட்ட ராஜா சர் குடும்பத்து விஐபிக்கள் ஆத்திரத்தில் உள்ளனர்.

மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தபோது, எம்.ஏ.எம்-மின் பாதுகாப்புக்காக அரசர் குடும்பத்து விஐபிக்களே தனியாக ஆட்களை நியமித்ததாகவும் சொல்கிறார்கள். மேலும், அரச குடும்பத்து நபர்களும் எம்.ஏ.எம். தரப்பு பங்காளிகளும் அவரை மருத்துவமனையில் சந்தித்துப் பேசியுள்ளனர். எம்.ஏ.எம்-மின் நண்பரான விஜய மல்லையாவும் அடிக்கடி அவரோடு போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம்.

குலமுறை வழக்கத்தை மீறாமல் தகுதியான இன்னொரு இளைஞரை சுவீகாரம் எடுத்தால் என்ன என்ற ரீதியில் கருத்துப் பரிமாற்றங்களும் செட்டியார் சமூகத்து விஐபிக்கள் மத்தியில் நடக்கின்றன. மொத்தத்தில் இனி சமாதானம் இல்லை என்றாலும் அதிரடி நடவடிக்கை எதுவும் உடனடியாக இருக்காது. முதலில் அரச குடும்பத்து சொத்துக்களை பாதுகாக்கும் நடவடிக்கை. அடுத்த கட்டமாக அதிகாரத்தை உறுதிப் படுத்தும் வேலைகள் நடக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, எம்.ஏ.எம்-மின் அண்ணன் குமாரராஜா முத்தையா செட்டியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 6-ம் தேதியும் முத்தையா செட்டியாரின் மனைவி குமார ராணி மீனா முத்தையாவின் 81-வது பிறந்த நாள் செப்டம்பர் 25-ம் தேதியும் வருகிறது. இந்த இரண்டு விழாக்களையும் விசேஷமாக கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த விழாக்களில் அரச குடும்பத்துக்கு வேண்டப்பட்ட முக்கியமான நபர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாக்களுக்குப் பிறகு செட்டிநாட்டு அரண்மனை விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x