Last Updated : 22 Mar, 2018 07:48 PM

 

Published : 22 Mar 2018 07:48 PM
Last Updated : 22 Mar 2018 07:48 PM

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் கிரண்பேடியுடன் சந்திப்பு: சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்போம் என உறுதி

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்தனர். வரும் 26-ம் தேதி கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்போம் என்று தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 நியமன எம்எல்ஏக்களும் இன்று மாலை ராஜ்நிவாஸ் வந்தனர். அவர்கள் கிரண்பேடியைச் சந்தித்துப் பேசினர்.

அதையடுத்து நியமன எம்எல்ஏக்கள் தரப்பில் சாமிநாதன் கூறியதாவது:

''மத்திய அரசு முறையாக மூன்று எம்எல்ஏக்களை நியமனம் செய்தது. ஜூலை 4-ம் தேதி பதவிப் பிரமாணத்தை ஆளுநர் செய்து வைத்தார். நியமனம் செய்தது சரி என்று நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. முதல்வரும், சபாநாயகரும் நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி வந்தனர். அவர்கள் மக்கள் பணியைச் செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தத் தடையாக இல்லாமல் அவர்கள் (ஆட்சியாளர்கள்) இருப்பார்கள் என நம்புகிறோம். தீர்ப்புக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் ஆட்சியாளர்கள் கருத்து கூற மாட்டார்கள் என நம்புகிறோம். வரும் 26-ல் கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்போம்'' என்று சாமிநாதன் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x