Last Updated : 02 Mar, 2018 05:38 PM

 

Published : 02 Mar 2018 05:38 PM
Last Updated : 02 Mar 2018 05:38 PM

வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது ஏன்?- தினகரன் சந்தேகம்

 

ஒட்டன்சத்திரம் சாலை திட்டத்தில் ஊழல் நடந்ததாக புகார் தெரிவித்த வெற்றிவேல், தங்க தமிழ்செல்வனை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

விழுப்புரம் பொதுக்கூட்டத்துக்கு பங்கேற்கச் செல்லும் வழியில் புதுச்சேரியில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஒட்டன்சத்திரத்தில் ரூ.1300 கோடியில் சாலை அமைக்க உலக வங்கியில் கடன் பெற்று டெண்டர் விட்டு, பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இதில் ஊழல் நடந்ததாக எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகியோர் புகார் தெரிவித்தனர்.

பொது வாழ்க்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வரத்தான் செய்யும். அதற்கு பதில் அளிக்க வேண்டும். இந்த புகார் உண்மை இல்லை என்றால் முதல்வர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் அல்லது பொய் குற்றச்சாட்டு கூறியவர்கள் மீது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக வழக்கு போட வேண்டும். அவற்றை செய்யாமல் அவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து இருப்பது நல்லது அல்ல. இந்த பணியை எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள்தான் எடுத்துள்ளனர். அதனால்தான் சந்தேகம் அதிகம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இந்த ஆட்சி வேண்டாம் என்று நினைக்கின்றனர்.

இந்த விஷயத்தில் உடனடியாக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மேலும் அனைத்து கட்சியினருடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் ஆட்சியாளர்களுக்கு அதெல்லாம் தெரியவில்லை, தங்களது ஆட்சியை நடத்திச் செல்ல வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றனர். நித்ய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சரியானதை செய்ய வேண்டும். கடந்த 10 ஆண்டுகாலமாக தினந்தோறும் நடவடிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்க்கலாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவற்றைக் குறிப்பிட்டு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் எனக் கேட்போம். எனவே காவல்துறை அதிகாரிகள் சரியாக பணியாற்ற வேண்டும்.

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் என்னிடம் வந்தார்கள். இப்போது காணாமல் போய் விட்டார்கள். மேலும் ராஜ்ய சபை உறுப்பினர் கோகுல்கிருஷ்ணன் என்னிடம் இல்லை'' என்று தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x