Last Updated : 03 May, 2019 05:19 PM

 

Published : 03 May 2019 05:19 PM
Last Updated : 03 May 2019 05:19 PM

கூத்தாண்டவர் உயிர்ப்பிக்கும் நிகழ்வு: 500 கிலோ அசைவ உணவு படையலிட்டு வழிபாடு

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா முடிந்து 16 நாட்களுக்குப் பிறகு கூத்தாண்டவர் உயிர்ப்பித்த தினத்தில் 500 கிலோ அசைவ உணவு கும்பமிட்டு சிறப்பு படையல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தைப் போல் ஆண்டுதோறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடந்த மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கையர் தாலி கட்டும் நிகழ்ச்சி கடந்த மாதம் 16-ம் தேதி இரவு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திருநங்கைகள் கூத்தாண்டவருக்கு முன் தாலி கட்டிக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து 17ஆம் தேதி காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மற்றும் அரவான் களப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் தாலி அறுத்து வெள்ளைப்புடவை அணிந்தனர். இதனையடுத்து அரவான் பலி முடிந்ததன் 16-ம் நாள் கூத்தாண்டவர் உயிர்ப்பித்து வருவதாக ஐதீகம்.

இதனையொட்டி நேற்று (வியாழக்கிழமை) இரவு கூத்தாண்டவர் கோயிலில் 500 கிலோ அசைவ உணவு படையலிட்டு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செயதனர். அதைத்தொடர்ந்து உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கும்பத்தில் வைக்கப்பட்ட உணவு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x