Published : 10 Sep 2014 11:38 AM
Last Updated : 10 Sep 2014 11:38 AM
அவிநாசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, உயிருக்குப் போராடிய அபூர்வ வனவிலங்கைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை மீட்டனர்.
அவிநாசி வட்டம், புதுப்பாளை யம் ஊராட்சிக்குட்பட்ட கோ தபாளையம், வலையாபாளையம், வண்ணாற்றாங்கரை ஆகிய பகுதியில் சுமார் 80 ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி உள்ளது. இங்கு மான், மயில், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள் வசிக்கின்றன. இவை உணவு, குடிநீருக்காக வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறுவது உண்டு.
இந் நிலையில், அவிநாசி போலீஸார் அவிநாசி அருகே உள்ள ராயம்பாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியே சாலையோரம் இருந்த வித்தியாசமான வனவிலங்கு, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் அடிபட்டு உயிருக்குப் போராடியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின், அதை மீட்டு அவிநாசி கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனவிலங்கு வேட்டைத் தடுப்பு பாதுகாவலர் பாலசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அடிபட்ட விலங்கு, மரநாயாக இருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
வனத் துறையினர் கூறுகையில், இது மரநாய் அல்ல. அரிய வகை அபூர்வ விலங்கு எனத் தெரிய வருகிறது. பார்ப்பதற்கு பூனை போன்று நீண்ட வாலைக் கொண்டுள்ளது. மர நாய்கள், அடர்ந்த வனப்பகுதியில் மட்டும் வாழக்கூடிய விலங்கு. அபூர்வ வன விலங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT