Published : 11 Sep 2014 06:49 PM
Last Updated : 11 Sep 2014 06:49 PM

மீனவர் பிரச்சினை: ராஜபக்சே பேட்டியை மேற்கோள் காட்டி மோடிக்கு ஜெயலலிதா காட்டமான கடிதம்

சிறைப்பிடித்தப் படகுகளை விடுவிக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதை மேற்கோள்காட்டிய முதல்வர் ஜெயலலிதா, மீனவர் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை தேவை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

"இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 78 மீனவர்கள் மற்றும் 72 படகுகளை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த மே மாதம் மோடி பிரதமராக பதவியேற்றது முதல், தமிழக மீனவர்கள் பாக் நீரிணையில் தங்களது பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடிக்கும்போது, அவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சிறிது கால அமைதிக்குப் பின்னர், தமிழக மீனவர்கள் மீது இலங்கை, மீண்டும் கடுமையான தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது இலங்கை.

மேலும் 3 சம்பவங்களில் ஏராளமான தமிழக மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து நேற்று 6 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் நேற்று நள்ளிரவுக்கு மேல் கச்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டு, தலைமன்னாருக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து 23 மீனவர்களுடன் சென்ற படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டு அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 3-வது சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் சென்றபோது, இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

தங்கள் தலைமையிலான மத்திய அரசு, இப்பிரச்னையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருவதை ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். அண்மைக்காலத்தில் பலமுறை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க தங்கள் தலைமையிலான அரசின் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டிருக்கிறது.

இருப்பினும் இலங்கை அரசின் போக்கு தற்போது கடுமையாகியுள்ளது. அப்பாவி ஏழை இந்திய மீனவர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வகையில், இலங்கை அரசு மிகக் கடுமையான நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை அவர்கள் விடுதலை செய்துள்ளபோதிலும், மீனவர்களுக்குச் சொந்தமான 64 படகுகளை கடந்த ஜுன் ஒன்றாம் தேதி முதல் விடுவிக்கவில்லை. மேலும், நடுக்கடலில் இயந்திரகோளாறு காரணமாக தத்தளிக்கும் படகுகள் மற்றும் இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு உதவிசெய்ய செல்லும் மீனவர்களையும் கைது செய்யும் பழக்கத்தை இலங்கை அரசு தொடங்கியுள்ளது. இந்தப் போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், அவர்கள் தங்களது பாரம்பரிய கடல்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடிக்கவும் இலங்கையின் இந்தப் போக்கை மாற்ற வேண்டும். இந்திய மீனவர்களுக்கு எதிரான இதுபோன்ற விரோதச் செயல்களை சகித்துக்கொள்ள முடியாது. இதனை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையிடம் இந்திய அரசு தெளிவாகவும், உறுதியாகவும் தெரிவிப்பதன் மூலம் மட்டுமே, இது சாத்தியமாகும்.

தமிழக மீனவர்கள் கொடூரமான முறையிலும், ஈவிரக்கமின்றியும் நடத்தப்படுவதற்கு, இலங்கையின் உச்சமட்டத்தில் உள்ளவர்களிடம் இருந்துதான் தூண்டுதல் வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டிருப்பதே இதற்கு சான்று. எனவே, அவர்களுக்குச் சென்றடையும் வகையில் இந்திய அரசு தெளிவான, உறுதியான தகவலை அனுப்ப வேண்டும்.

கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணவும், நீண்ட கால விரைவான நடவடிக்கை தேவை தேவை. இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்கள் 78 பேரையும், பிடித்து வைக்கப்பட்டுள்ள 72 படகுகளை உடனடியாக மீட்கவும், மத்திய அரசு அதிகபட்ச முன்னுரிமை அளித்து தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்கவேண்டும்" என்று முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிததில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x