Published : 06 Sep 2014 09:15 AM
Last Updated : 06 Sep 2014 09:15 AM
'எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டனர்' என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகர்கோவிலில் வெள்ளிக் கிழமை அவர் கூறும்போது >, ‘குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்ததை நான் விரும்பாமல் பேசியது போன்ற ஒரு தோற்றத்தை சிலர் உருவாக்கிவிட்டனர். 1893-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை ஒற்றுமை விழாவாக அறிவித்து, சுதந்திர போராட்டத்தில் சாதாரண மக்களையும் ஈடுபட வைத்தவர் பாலகங்காதர திலகர். நாட்டின் 85 சதவீத இந்துக்களை ஒன்று படுத்தினால் சுதந்திர போராட் டம் வேகமடையும் என்ற நம்பிக் கையுடன் அவர் செயல்பட்டார்.
85 சதவீத இந்துக்கள், 15 சதவீத சிறுபான்மை மக்கள் ஒன்றுபட்டு 100 சதவீத இந்தியர் என்ற உணர்வோடு செயல்பட்டால் சாதி, மத, இன, மொழி, பிராந்திய பாகுபாடுகளுக்கு இடமிருக்காது. அப்படியொரு நிலை இருந்திருந்தால் பாகிஸ்தான்கூட பிரிந்திருக்காது. கேரளாவும் குமரியை இழந்திருக்காது. தேக்கடி போன்ற பகுதிகள் தமிழகத்துடன் இணைந்திருந்தால் முல்லை பெரியாறு பிரச்சினை வந்திருக்காது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஒற்றுமையை வலியுறுத்தி பேசினேன்.
தமிழகத்தோடு கன்னியா குமரியை இணைத்த தியாகிகளின் செயலை மதிக்கிறோம். குமரி தமிழகத்துடன் இணைந்ததை நூறு சதவீதம் வரவேற்கிறோம். நான் பேசியதை முழுமையாக வெளியிடாமல், ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிட்டனர்.
மீனவர் பிரச்சினையில் சுப்பிரமணிய சுவாமி பேசியது குறித்து கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். உள்ளாட்சி இடைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றி பெறும். மோடி அரசு 100 நாளில் அதிக சாதனைகளை செய்துள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மரியாதையே இதற்கு சாட்சி. குமரியில் புற்றுநோய் சிகிச்சை மையம், இஎஸ்ஐ மருத்துவமனை கொண்டு வர முயற்சி எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT