Last Updated : 18 Jan, 2019 03:14 PM

 

Published : 18 Jan 2019 03:14 PM
Last Updated : 18 Jan 2019 03:14 PM

புதுச்சேரியிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சித்தது: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குற்றச்சாட்டு

கர்நாடக மாநிலத்தைப் போன்று புதுச்சேரியிலும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்ததாக காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மாநில மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கூறியதாவது:

''புதுச்சேரியில் சக்தி செல்போன் ஆப் திட்டம் வரும் 20-ல் தொடங்கப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் இதன் மூலம் ஒருங்கிணைப்படுவார்கள்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தினந்தோறும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டு வருகின்றார். ராஜ்நிவாஸ் பாஜகவின் தலைமையகமாகச் செயல்படுகிறது. பொங்கல் பரிசுகளை மக்களுக்கு தராமல் தடுத்துள்ளார். பாஜக ஆட்சியில் இருந்தால் இவ்வாறு செயல்பட்டிருப்பாரா என்ற கேள்வி எழுகிறது. அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதே இவரது எண்ணம்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு இடையூறு அளிப்பதையே நோக்கமாகக் கொண்டு மத்திய பாஜக அரசு செயல்படுகின்றது.

ஊழலை உருவாக்குவதே பாஜக தான். கர்நாடகாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க நினைத்தனர். ஆனால் முடியவில்லை. கர்நாடகத்தைப் போன்று புதுச்சேரியிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பலமுறை பாஜக முயன்று தோல்வியடைந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கட்சியின் மீது விஸ்வாசத்துடன் எம்எல்ஏக்கள் உள்ளனர்" என்று சஞ்சய் தத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x