Published : 01 Dec 2018 10:24 AM
Last Updated : 01 Dec 2018 10:24 AM

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

குமரிக்கடல் முதல் தென் தமிழக கடலோரப் பகுதியில், தென்மேற்கு வங்கக் கடல் வரை நிலவிய காற்றழுத்த தாழ்வுநிலை, தற்போது தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத் தில் 8 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 7 செமீ, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 6 செமீ, நாகை மாவட்டம் தரங்கம்பாடி, தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பெரிய அணைக்கட்டு, திருவாரூர் மாவட் டம் குடவாசல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், புதுச்சேரி, நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 30-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வழக்கமாக 352 மி.மீ (சராசரி) மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 316 மிமீ மழை தான் பெய்துள்ளது. இது வழக் கத்தை விட 10 சதவீதம் குறைவு. சென்னையில் 632 மிமீ மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 321 மிமீ மட்டுமே பெய்துள்ளது. இது இயல்பை விட 49 சதவீதம் குறைவு. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x