Published : 25 Dec 2018 11:39 AM
Last Updated : 25 Dec 2018 11:39 AM

கேரள ஜோதிடரிடம் விசாரணை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலைகள் ஓரிரு நாளில் கண்டுபிடிக்கப்படும் - சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி தகவல்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் மாயமான சிலைகள் இருக்கும் இடத்தை இன்னும் ஓரிரு நாட்களில் கண்டுபிடித்து விடுவோம் என்று சிலைக் கடத்தல் தடுப்புப்  பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம்  நடத்துவதற்கு முன்னதாக திருப்பணிகள் செய்யப்பட்டன. அப்போது, புன்னைவன நாதர் சிலை, ராகு மற்றும் கேது சிலைகள் சேதமடைந்திருப்பதாகக்  கூறி  அந்தச் சிலைகள் மாற்றப்பட்டு, புதிய சிலைகள் வைக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்தப் பணிகள் செய்யப்பட்டன. ஆனால் கோயில் சிலைகளை மாற்றுவதற்கு  அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இரவோடு  இரவாக யாருக்கும் தெரியாமல் மூன்று சிலைகளும் மாற்றப்பட்டன. மாற்றப்படும் சிலைகளை ஆகமவிதிப்படி பூஜை  செய்து, மண்ணில் புதைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 3 சிலைகளையும் அதிகாரிகள் துணையுடன் வெளிநாட்டுக்குக் கடத்தி, பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிலைகள் மாயமானது குறித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப்  பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

சிலைகள் மாயமான காலக்கட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபாலன், ஸ்தபதி முத்தையா, கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த திருமகள் (தற்போது கூடுதல் ஆணையராக இருக்கிறார்) உட்பட சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சிலைக்  கடத்தல் தடுப்புப்  பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கபாலீசுவரர் கோயிலில் மாயமான புன்னைவன நாதர் சிலை,  ராகு மற்றும் கேது சிலைகள்  சுமார் 1,600 ஆண்டுகள் தொன்மையானவை. இவற்றுக்கு வெளிநாடுகளில் பல கோடி மதிப்பு. இந்தச் சிலைகள் விற்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சிலைகளை மாற்றுவதற்கு முன்பு கேரள ஜோதிடரான உன்னிகிருஷ்ண பணிக்கர் என்பவரை வரவழைத்து, கபாலீசுவரர் கோயிலில் பிரசன்னம் பார்த்துள்ளனர்.

ஜோதிடர் கூறியதன் பேரிலேயே சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, சிலைகள் கடத்தப்பட்டதற்கும் ஜோதிடருக்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. ஜோதிடரை பிரசன்னம் பார்க்க அழைத்து வந்தது யார், சிலைகளை மாற்றச் சொன்னதற்கு காரணம் என்ன போன்றவை குறித்து யாருமே தகவல் தெரிவிக்க மறுக்கின்றனர். எனவே, ஜோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கரிடமே விசாரணை நடத்த முடிவு செய்தோம். அவரை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறோம். அவரிடம் தற்போது விசாரணை நடத்தி வருகிறோம்.

ஒரு தொழில்அதிபரின் பெயரை உன்னி கிருஷ்ண பணிக்கர் தெரிவித்து இருக்கிறார். அந்தப் பெயரைப்  பயன்படுத்தி விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் நினைக்கிறார். கபாலீசுவரர் கோயிலில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் எங்கே இருக்கின்றன என்பதை இன்னும் ஓரிரு நாளில் ஜோதிடர் உன்னி கிருஷ்ண பணிக்கர் மூலம் கண்டுபிடித்து விடுவோம். விரைவில் அவற்றை யும் மீட்டு கோயிலுக்கு எடுத்து வருவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x