Last Updated : 06 Dec, 2018 01:02 PM

 

Published : 06 Dec 2018 01:02 PM
Last Updated : 06 Dec 2018 01:02 PM

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் வழக்கு கடந்து வந்த பாதை: ராஜ்நிவாஸ் கதவை மூடி பதவிப் பிரமாணம் செய்து வைத்த கிரண்பேடி

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் வழக்கு கடந்த வந்த பாதை குறித்து அறியலாம்.

வழக்கு கடந்து வந்த பாதை

புதுச்சேரி மாநில அரசு பொறுப்பேற்று ஓராண்டு கடந்தும் நியமன எம்எல்ஏக்களை நியமிக்காமல் இருந்தது.  மத்திய பாஜகவின் உத்தரவுப்படிதான் ஆளுநர்  கிரண்பேடி தாமாகவே 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்க  மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரைத்தார்.  அப்பட்டியலில் பாஜகவின் மாநிலத் தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், பாஜகவைச் சேர்ந்த தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோர் பெயர் இடம் பெற்றிருந்தது.  உள்துறையானது இப்பரிந்துரையை ஏற்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி உத்தரவைப் பிறப்பித்தது.

ஜூலை 2017-ம் ஆண்டு 4-ம் தேதி இதுதொடர்பான விவரம் புதுச்சேரியில் வெளிவந்தது. அன்றைய தினம் இரவே ராஜ்நிவாஸுக்கு 3 எம்எல்ஏக்களும் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது பத்திரிக்கையாளர்கள் யாரும் ராஜ்நிவாஸுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கதவை மூடி பதவியேற்பு நிகழ்வு நடந்தது.

கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தவுடன், அவர்கள் மூன்று பேரும் சட்டப்பேரவையில்  இருக்கை, பேரவை வளாகத்தில் அலுவலகம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகை  வழங்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு கடிதம் அனுப்பினார்.

அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. மத்திய அரசானது நியமன எம்எல்ஏக்களாக மூவரை நியமித்தது செல்லும் என்று தீர்ப்பு வந்தது. அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு மேல்முறையீட்டை காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் செய்தார். அவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது.

மேல்முறையீட்டு வழக்கு நடந்த சூழலில் பேரவைக்கூட்டத்துக்கு இருமுறை வந்த நியமனஎம்எல்ஏக்களை பேரவைக்குள் சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

உச்ச நீதிமன்றம் அப்போது அளித்துள்ள கருத்தில், பேரவையில் நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் அனுமதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து ஆளுநரும் இதைச் செயல்படுத்த அறிவுறுத்திவந்தார். நெருக்கடி அதிகரித்த சூழலில் பேரவைக்குள் நியமன எம்எல்ஏக்கள் கடந்த ஆகஸ்ட்டில் முதல்முறையாக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம், முதல்வர் நாராயணசாமி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.  அதையடுத்து அவர்கள் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்றனர். அன்றைய தினம் நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க அனுமதி மறுத்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதன்பிறகு தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று வந்தது.

புதுச்சேரியில் பாஜகவினர் 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அவர்கள் நியமனத்தை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், யூனியன் பிரதேசம் என்பது மத்திய அரசு ‘சொத்து’ என்ற வாதத்தை ஏற்பதாக தெரிவித்தது.

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x