Published : 14 Sep 2014 12:42 PM
Last Updated : 14 Sep 2014 12:42 PM

கோவை கண்ணம்பாளையத்தில் அரிதான முள்ளெலி பிடிபட்டது

கோவையை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் தனது வீட்டின் அருகே நடைபயணம் மேற்கொண்டபோது, சாம்பல் நிறத்தில் நீண்ட கூர்மையான முட்கள் கொண்ட ஒரு உயிரினம் ஊர்ந்து செல்வதைப் பார்த்துள்ளார்.

அதன் அருகே சென்று பிடிக்க முயன்றபோது, உடனே தன் உடலில் உள்ள கூர்மையான முட்களைக் கொண்டு மூடிக் கொண்டது. பின்பு அதைப் பிடித்துள்ளார்.

அதன் முகத்தைப் பார்ப்பதற்காகப் பல மணி நேரம் முயற்சி செய்தும் முகத்தைக் காட்டாமல், தன்னை பாதுகாக்கும் விதமாக பந்து போல மூடிக்கொண்டது.

பின்னர் செல்வகுமார் அதை பாதுகாப்பாகக் கூடையில் வைத்து வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கு எடுத்து வந்தார். அந்த உயிரினம் குறித்து விசாரித்தபோது, அது முட்காட்டு பன்றி என்ற பெயரில் அழைக்கப்படும் அரிய வகை முள்ளெலி என்பதும், எலி உருவத்திலும், உடலின் மேற்புறம் முள்ளம் பன்றியைப் போன்ற அமைப்புடையதாக இருக்குமென்பதும் தெரியவந்தது.

மேலும் 4 ஆண்டுகள் மட்டுமே வாழும் இந்த எலி பொதுவாகக் குளிர் பிரதேசத்தில் இருக்காது, எதிரிகளைப் பார்த்ததும் முகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் உள்ளே இழுத்துக் கொண்டு முற்கள் மட்டும் வெளியே தெரியும் வகையில் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தன்மையுள்ளது எனத் தெரிய வந்தது.

இதையடுத்து கோவை மாநகராட்சி வ.ஊ.சி. உயிரியல் பூங்காவில் அந்த முள்ளெலியை பாதுகாப்பாக செல்வராஜ் ஒப்படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x