Published : 11 Apr 2014 10:08 AM
Last Updated : 11 Apr 2014 10:08 AM

போலீஸ்காரர் அடித்துக் கொலை: சேலத்தில் மர்ம கும்பலுக்கு வலை

சேலத்தில் போலீஸ்காரரை அடித்துக்கொலை செய்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சேலம் தெற்கு சரக போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தவர் ராஜூ (41). நங்கவள்ளி அருகே உள்ள ஓலப்பட்டியைச் சேர்ந்தவர். இவரது மனைவி புஷ்பா (35). இவர்களுக்கு பவித்ரா (17) என்ற மகளும், நவீன்குமார் (15) என்ற மகனும் உள்ளனர். பவித்ரா பிளஸ் 2 படித்து வருகிறார். நவீன்குமார் பத்தாம் தேர்வு எழுதியுள்ளார். சேலம் அன்னதானப்பட்டி பந்தல்காளியம்மன் கோயில் அருகே வசித்து வருகின்றனர்.

ராஜூவுக்கு மது பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை சீலநாயக்கன்பட்டி ராமையன்காடு சுடுகாடு அருகே உள்ள குடோன் பகுதியில் உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில், ராஜூ இறந்து கிடந்தார். அவரது பேன்ட், சர்ட் ஆகியவை அருகே கிடந்துள்ளது. சற்று தொலைவில் அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீஸார் சம்பவ இடம் சென்று, விசாரணை மேற்கொண்டனர். போலீஸ்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்த காவல்துறை ஆணையர் அமல்ராஜ், உதவி ஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். ராஜூ உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜுவின் குடிப்பழக்கம் காரணமாக கடந்த இரண்டு மாதத்துக்கு முன் அவரது மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் ஓமலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், ராஜூ கொலை செய்யப்பட்டதை அறிந்த மனைவி, குழந்தைகள் சம்பவ இடத்துக்கு வந்து கதறி அழுதனர்.

குடிப் பழக்கத்தின் காரணமாக நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ராஜூ வைத்திருந்த அலைபேசி காணவில்லை. அலைபேசி அழைப்பைக் கொண்டு கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x