Last Updated : 24 Oct, 2018 05:27 PM

 

Published : 24 Oct 2018 05:27 PM
Last Updated : 24 Oct 2018 05:27 PM

தீபாவளி கூப்பன் தராததால் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வரை முற்றுகையிட்ட கட்டிடத் தொழிலாளர்கள்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை முற்றுகையிட்ட கட்டிடத் தொழிலாளர்கள் தீபாவளி கூப்பன் வழங்காதது குறித்து முறையிட்டனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரி மாநில கட்டிடத் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் இலவசப் பொருட்கள் வாங்க, கூப்பன்கள் வழங்குவது வழக்கம். ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது மணல் பிரச்சினையால் கட்டிடத் தொழிலும் இல்லை என்று அதிகாரிகளிடம் பேசியும் பலன் இல்லை. இதையடுத்து கட்டிடத் தொழிலாளர்கள் பலர் சட்டப்பேரவைக்கு இன்று வந்தனர்

சட்டப்பேரவையிலிருந்து காரில் வெளியே வந்த முதல்வர் நாராயணசாமியை முற்றுகையிட்டனர். அதையடுத்து காரில் இருந்து முதல்வர் நாராயணசாமி இறங்கினார்.

அப்போது அவரை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், “புதுச்சேரியில் மணல் அள்ள 144 தடையுள்ளது. வேலையும் இல்லை. தீபாவளி பரிசுக் கூப்பனும் தரவில்லை” என்று முறையிட்டனர். அப்போது முதல்வர், “இதுதொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன்” என்று கூறிப் புறப்பட்டார்.

அதைத் தொடர்ந்து போலீஸார் கட்டிடத் தொழிலாளர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x