Last Updated : 13 Oct, 2018 04:23 PM

 

Published : 13 Oct 2018 04:23 PM
Last Updated : 13 Oct 2018 04:23 PM

சிஎஸ்ஆர் நிதியை நேரடியாக ஆளுநர் மாளிகை வசூல் செய்ததில் ஊழல்: நாராயணசாமி நேரடி குற்றச்சாட்டு

பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டமான சிஎஸ்ஆர் நிதியை நேரடியாக ஆளுநர் மாளிகை வசூல் செய்ததில் ஊழல் நடந்துள்ளது என்று முதல்வர் நாராயணசாமி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை கமிட்டி அறையில் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து புதுச்சேரி வளர்ச்சிக்காக நிதி பெறுவதற்கு அரசின் சார்பில் பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வு திட்டம் (சிஎஸ்ஆர்) செயல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் தலைவராக நான் உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் அரசு நிறுவனங்களுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கும், பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம், கழிப்பறைகள் கட்டுவதற்கும் பல தொண்டு நிறுவனங்களும், வங்கிகளும் முன்வந்து நிதி வழங்கி இருக்கிறார்கள்.

சிஎஸ்ஆர் கமிட்டி மூலமாக அந்த நிதியை பெற்று அந்தந்த துறைகளின் திட்டங்களுக்காக நிதிகளை வழங்கி வருகிறோம். 2 நாட்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் சம்பந்தமாக மருத்துவத்துறையில் இயந்திரம் வாங்குவதற்கு இந்தியன் வங்கி ரூ.13.50 லட்சம் காசோலை கொடுத்தார்கள். இப்படி பல நிறுவனங்களிலிருந்து நிதி பெறப்பட்டு முறையாக, வெளிப்படையாக செலவு செய்யப்படுகிறது.

சிஎஸ்ஆர் நிதி சம்பந்தமாக தலைவர், அதற்கான விதிமுறைகள் இருக்கும்போது ஆளுநர் அலுவலகத்திலிருந்து பல நிறுவனங்கள், ரோட்டரி கிளப் உள்ளிட்ட பெருநிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு சிஎஸ்ஆர் நிதி கேட்டு பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.. எனக்கு கிடைத்த தகவல்படி இதுவரை ரூ.85 லட்சம் வசூல் செய்திருக்கிறார்கள்.

அந்த நிதி யார், யாரிடமிருந்து வசூல் செய்யப்பட்டது என்ற விவரம் இதுவரை கொடுக்கப்படவில்லை. ஆளுநர் எதற்கெடுத்தாலும், வெளிப்படையான நிர்வாகம், ஊழலில்லாத நிர்வாகம் என்று கூறுகிறவர். அந்த நிதியை சிஎஸ்ஆர் கமிட்டிக்கு அனுப்ப வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்கு செலவு செய்ய அதிகாரம் கிடையாது.

ஆளுநர் அலுவலகத்தின் பெயரைப் பயன்படுத்தி சிஎஸ்ஆர் நிதியை வசூல் செய்திருக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகம். ஆளுநர் அலுவலகமே ஊழலுக்கு உடந்தையாக இருக்கிறது. ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமே நிதி கொடுப்பதற்கு ஆளுநர் மாளிகையை அணுகினால், சிஎஸ்ஆர் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும். தன்னிச்சையாக அந்த நிதியைச் செலவு செய்தவற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.

குறிப்பாக, ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்களுடைய சொந்த நலனுக்காக சிஎஸ்ஆர் என்ற பெயரில் பணத்தை வசூல் செய்து பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும். அதிகாரம் இல்லாமல் ஆளுநர் சிஎஸ்ஆர் நிதியை வசூல் செய்துள்ளார். இது சம்பந்தமாக ஆளுநர், சிஎஸ்ஆர் கமிட்டிக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார்கள், எவ்வளவு செலவு செய்யப்பட்டது, எதற்கு செலவு செய்யப்பட்டது என்ற விவரத்தை அளிக்க வேண்டும்.

எதற்கெடுத்தாலும் விதிமுறையைப் பேசுகிற ஆளுநர், சிஎஸ்ஆர் கமிட்டி குறித்த விதிமுறையை மறந்ததற்கு காரணம் என்ன? பலர் என்னிடம் நேரடியாக வந்து ஆளுநர் மாளிகை மூலம் தொலைபேசியில் சிஎஸ்ஆர் நிதி கேட்டு தொந்தரவு கொடுப்பதாக புகார் அளிக்கின்றனர். இவ்வாறு பணம் வசூலிக்க ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஏதாவது உத்தரவிட்டாரா என்பது தெரிய வேண்டும். இதற்கு ஆளுநர் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன். இவ்விஷயத்தை உள்துறை அமைச்சரிடமும் தெரிவிப்பேன்".

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x