Last Updated : 30 Aug, 2018 02:34 PM

 

Published : 30 Aug 2018 02:34 PM
Last Updated : 30 Aug 2018 02:34 PM

எழுத்தாளர் ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து என உளவுத்துறை தகவல்: பாதுகாப்பு கோரி புதுச்சேரி முதல்வரிடம் மனு

விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை தெரிவித்ததை தொடர்ந்து தனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கக்கோரி தனது கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து மனு அளித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை இரண்டு நாட்களுக்கு முன் ரவிக்குமாரிடம் தெரிவித்தது.

இந்நிலையில் ரவிகுமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவருக்கு புதுச்சேரி அரசு சார்பில் பாதுகாப்பு அளிக்கக் கோரி ரவிக்குமார், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக அமைப்பினை சார்ந்தவர்கள் சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமியை புதன்கிழமை இரவு சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் நாராயணசாமி எழுத்தாளர் ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் இத்தகவலை தெரிவித்து ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அப்போது முதல்வரிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கையெழுத்திட்ட மனுவும் தரப்பட்டது. அதன்விவரம்:

“ரவிக்குமாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழக உளப்பிரிவு மூலம் தகவல் கிடைத்துள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் அடுத்ததாக எழுத்தாளர் ரவிக்குமாரை கொலை செய்ய குறி வைத்துள்ளதாக என்னிடம் போலீஸார் கூறினர். பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடையோர் அதற்கு முன்னர் நடந்த கோவிந்த் பன்சாரே, தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி கொலைகளுக்கு காரணம் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது. அதனால் இந்த அச்சுறுத்தலை அலட்சியம் செய்ய முடியவில்லை. உரிய பாதுகாப்பு தரவேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x