Published : 08 Aug 2018 10:57 AM
Last Updated : 08 Aug 2018 10:57 AM

மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய திமுக சார்பில் மெரினாவில் இடம் ஒதுக்க கோரிக்கை விடப்பட்டதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு திமுக சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் உள்ளிட்டோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை(இன்று) காலை விசாரணைக்கு ஒத்திவைத்தனர்.

இதில் மெரினாவில் நினைவிடம் அமைக்க காமராசர், ஜானகிக்கு கருணாநிதி இடம் ஒதுக்கவில்லை. கருணாநிதி அப்போது எடுத்த நிலைப்பாட்டைப் பின்பற்றி தற்போது தமிழக அரசு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்கள், ஆட்சியில் இருக்கும் போது இறந்தவர்களையும் ஒரே மாதிரியாக இறுதிஅஞ்சலி செலுத்த முடியாது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், வீர கதிரவன், ஆர்.விடுதலை ஆகியோர் வாதாடி வருகின்றனர். அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். இதற்கிடையே திமுக மனுவை எதிர்த்து அரசு சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘திமுக தலைவர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க இயலவில்லை என்பது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக திமுக எதிராக வழக்கு தொடர முடியாது. இடம் ஒதுக்க முடியாததற்கு மத்திய அரசின் விதிகளே காரணம்’’ என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு திமுக தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘‘முன்னாள் முதல்வர்கள் நினைவிடத்தை மெரினாவில் அமைப்பதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரமில்லை. இறந்தவர்களின் தகுதி கருதி, மாநில அரசே முடிவு செய்யலாம்’’ எனத் தெரிவித்தனர்.

அப்போது, நீதிபதிகள், மெரினாவில் நினைவிடம் அமைக்கக் கருணாநிதிக்கு இடம் அளிக்கத் தமிழக அரசு மறுத்ததற்கான காரணம் என்ன என்பதைக் கூறுங்கள் என்று தமிழகஅரசிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், ‘‘முன்னாள் முதல்வருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கத் தமிழக அரசின் விதிமுறைகளில் இடம் இல்லை. கருணாநிதி ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜானகிக்கு இடம் மறுக்கப்பட்டது. திமுக தலைவர் மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது. கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதில் வேண்டுமென்றே திமுக அரசியலாக்குகிறது.

முன்னாள் முதல்வர்கள் காமராசர், ஜானகி அம்மாள் விவகாரத்தில் கருணாநிதி என்ன நிலைப்பாட்டைப் பின்பற்றி தமிழக அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்களையும், பதவியில் இருக்கும்போது இறந்தவர்களையும் மரபுகள்படி ஒரேமாதிரியாகக் கருத முடியாது’’ என வாதிட்டனர்.

திமுக தரப்பில் வாதிடுகையில், ‘‘முதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதே சாலச் சிறந்தது.

காமராசர், காந்தி மண்டபம் ஆகியவை அடையாற்றில் உள்ளன. அவை மெரினாவில் இல்லை. இந்தத் தலைவர்களின் சித்தாந்தங்கள் திராவிட இயக்கத்தில் இருந்து வேறுபட்டவை, தலைவர்களும் வெவ்வேறானவர்கள்’’ என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை வழங்கியது. ஒற்றைவரியில் மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது. தீர்ப்பின் முழு விபரம் பின்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x