Last Updated : 16 Aug, 2018 05:41 PM

 

Published : 16 Aug 2018 05:41 PM
Last Updated : 16 Aug 2018 05:41 PM

மொழிபெயர்க்க அழைத்த கிரண்பேடி; மறுத்த நாராயணசாமி

தனது ஆங்கில உரையை மொழிபெயர்க்க முதல்வர் நாராயணசாமியை ஆளுநர் கிரண்பேடி அழைத்தார். ஆனால், அவர் மறுத்து விட்டார். அதையடுத்து டிஜிபியை அழைத்தவுடன் அவர் மொழிபெயர்த்தார்.

புதுச்சேரி இந்திய அரசுடன் இணைய வேண்டுமா என 1954-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ம் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் இணைவதற்கு ஆதரவாக 170 உறுப்பினர்களும், எதிராக 8 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனையடுத்து 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி புதுச்சேரி இந்தியாவோடு இணைந்தது. இந்நாள் சட்டபூர்வ பரிமாற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி புதுவை அரசின் கலை பண்பாட்டு மையம் சார்பில் இந்தியாவோடு புதுச்சேரி இணைக்கப்பட்ட சட்டபூர்வ பரிமாற்ற நாள் கீழுர் நினைவு மண்டபத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முதல்வர் நாராயணசாமி காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு கீழுர் நினைவிடத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி கவுரவப்படுத்தி சிறப்புரையாற்றி முடித்தார். அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அங்கு வந்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பேசுவதற்கு முன்பு, தனது உரையை முதல்வர் நாராயணசாமியால் மட்டுமே முழுமையாக மொழிபெயர்க்க முடியும் எனக்கூறிவிட்டு அவரை அழைத்தார்.

ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு கம்பன் விழாவில் ஆளுநர் கிரண்பேடி உரையை முதல்வர் நாராயணசாமி மொழிபெயர்த்தார். வழக்கமாக ஆளுநருடன் வரும் அதிகாரிகள் மொழிபெயர்க்காமல் முதல்வர் மொழிபெயர்க்கச் சென்றது தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவத் தொடங்கின.

அதைக் கருத்தில் கொண்டு இன்று ஆளுநர் அழைத்தும் முதல்வர் நாராயணசாமி மறுத்துவிட்டார். தொடர்ந்து ஆளுநர் அழுத்தம் கொடுத்தும் அவர் வரவில்லை. இந்நிலையில், புதுவை காவல்துறை இயக்குநர் சுந்தரி நந்தாவை, ஆளுநர் அழைத்து மொழிபெயர்க்கச் செய்தார்.

பூர்வீகத் தமிழரான சுந்தரி நந்தா டெல்லியில் நீண்ட காலம் இருந்ததால் ஓரளவு சமாளித்து ஆங்கிலம் கலந்த தமிழில் மொழிபெயர்த்தார். சுந்தரி நந்தா மொழிபெயர்க்கும்போது முதல்வரைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே ஆளுநர், ''எனது எண்ணத்தை முழுமையாக சுந்தரி நந்தா மொழிபெயர்க்கிறார். எனது எண்ணத்தை அவரால் மட்டுமே முழுமையாக வெளிப்படுத்த முடியும்'' என்றார். இதைப் பார்த்த முதல்வர் நாராயணசாமியும் மற்றவர்களும் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x