Published : 07 Aug 2018 10:09 PM
Last Updated : 07 Aug 2018 10:09 PM

கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு: இரவு 10.30 மணிக்கு விசாரணை

திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்ட வழக்கு இரவு 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

திமுக தலைவர் மறைவை அடுத்து அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய திமுக செயலதலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்த அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வரிடம் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் பரிசீலனை செய்தார். இதனிடையில் கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்'' என்று கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதைக் கண்டித்தனர். திமுக தொண்டர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் திமுக சார்பில் மெரினாவில் உடல் அடக்கம் செய்ய அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹுலுவாடி ரமேஷ் முன் இரவு 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் முறையீடு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x