Last Updated : 10 Aug, 2014 01:01 PM

 

Published : 10 Aug 2014 01:01 PM
Last Updated : 10 Aug 2014 01:01 PM

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து சென்னை வந்த தமிழக இளைஞருக்கு எபோலா அறிகுறி இல்லை: சொந்த ஊர் செல்ல மருத்துவர்கள் அனுமதி

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியில் இருந்து சென்னை வந்த தமிழக இளைஞருக்கு எபோலா வைரஸ் அறிகுறி இல்லாததால் அவர் சொந்த ஊர் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக புனே அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் 'எபோலா வைரஸ்' காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்கியதில் ஆப்பிரிக்கா நாடுகளில் சுமார் 1,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தியாவில் சென்னை விமான நிலையம் உட்பட நாடு முழுவதும் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சிறப்பு சுகாதாரக்குழு அமைக்கப்பட்டது.

தமிழக வாலிபர்

இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்யும் தேனி மாவட்டம் குடுவாளைப்பட்டியை சேர்ந்த பார்த்திபன் வெங்கடேஷ் (25) என்பவர், கினியில் இருந்து துபாய் வழியாக எமிரேட் விமானத்தில் சென்னை வருவதாக சுகாதாரத்துறைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

மருத்துவமனையில் அனுமதி

எமிரேட் விமானம் மூலம் சனிக்கிழமை இரவு சென்னை வந்த பார்த்திபனை, உடனடியாக 108 ஆம்புலன்ஸில் ஏற்றி நள்ளிரவில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிறப்பு வார்டில் சேர்த்தனர். ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு எபோலா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. அதனால் அவருடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக புனே தேசிய வைராலஜி மையத்திற்கு (என்ஐவி) அனுப்பியுள்ளனர்.

புனேயில் ரத்த பரிசோதனை

இதுதொடர்பாக அரசு பொது மருத்துவமனை துணை மருத்துவக் கண்காணிப்பாளரும், பார்த்திபனுக்கு சிகிச்சை அளித்த வருமான டாக்டர் ரகுநந்தன் கூறுகையில், ''பார்த்திபனுக்கு எபோலா நோய் அறிகுறிகள் எதுவும்

இல்லை. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இருந்தாலும், அவருடைய ரத்த மாதிரியை புனேக்கு அனுப்புகிறோம். அதன் பிறகே எபோலா தாக்கியுள்ளதா, இல்லையா என தெரியும். அவர் சொந்த ஊர் சென்றாலும் தேனி மாவட்ட மருத்துவ அதிகாரிகள் அவரை 21 நாள் கண்காணிப்பார்கள். எபோலா இருப்பது உறுதி செய்யப்பட்டால், இங்கேயே தீவிர சிகிச்சை அளிக்கப்படும். அதனால் யாரும் பயப்பட தேவையில்லை'' என்றார்.

டிஸ்சார்ஜ்

எபோலா அறிகுறி இல்லாததால் பார்த்திபனை சொந்த ஊர் செல்ல மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பார்த்திபன் பின்னர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றார்.

எபோலா வைரஸ் உதவி மையம்

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் 104 என்ற மருத்துவ உதவி சேவை மையம் செயல் படுகிறது. டெங்கு காய்ச்சல் இருந்த போது பொது சுகாதாரத்துறை அலுவலகத்தில் 044-24350496, 044-24334811, 9444340496, 9361482899 என்ற தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இதுவரை எபோலா வைரஸ் நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனாலும் எபோலா வைரஸ் குறித்த சந்தேகங்களை பொதுமக்கள் மேலே கூறப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x