Last Updated : 30 Jul, 2018 05:44 PM

 

Published : 30 Jul 2018 05:44 PM
Last Updated : 30 Jul 2018 05:44 PM

புதுச்சேரி வடக்கு காங்கிரஸ் தலைவர் கூலிப்படையால் பட்டப்பகலில் வெட்டிக்கொலை: தொழிற்சாலை விவகாரம் காரணமா?

 

புதுச்சேரி வடக்கு காங்கிரஸ் தலைவர் ஜோசப் கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தனியார் தொழிற்சாலை விவகாரம் காரணமா என்ற கோணத்தில் தமிழக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இக்கொலை காரணமாக காலாப்பட்டு பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஜோசப். இவர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டு வருகின்றார். இவர் திங்கள்கிழமை இரண்டு சக்கர வாகனத்தில் காலாப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடி அருகே ஹெல்மெட் அணிந்து வந்த ஐந்து மர்ம நபர்கள் ஜோசப்பை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் கீழே விழுந்த அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். சம்பவத்தை கேள்விப்பட்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மருத்துவமனைக்கு சென்று பார்த்தார்.

இந்நிலையில் சிறிது நேரத்திற்குள் சிகிச்சை பலன் தராமல் ஜோசப் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யும் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்கள். ஜோசப் உயிரிழந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது செந்த ஊரான காலப்பட்டில் பதற்றம் நிலவுவதால் தமிழக மற்றும் புதுச்சேரி போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காலப்பட்டில் செயல்படும் தனியார் மருந்து தொழிற்சாலை விரிவாக்கம் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஜோசப் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் மற்றொரு பிரிவினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீச்சு சம்பவம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்த விவாகாரம் தொடர்பாக கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு எந்த காரணத்தால் கொலை சம்பவம் ஏற்பட்டது என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரவையில் முறையீடு: ஜோசப் இறந்ததையடுத்து அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் சட்டப்பேரவைக்கு வந்து முதல்வர் நாராயணசாமியிடம் முறையிட்டு அழுதனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x