Last Updated : 16 Apr, 2025 10:50 AM

8  

Published : 16 Apr 2025 10:50 AM
Last Updated : 16 Apr 2025 10:50 AM

பாஜகவுடன் கூட்டணி மட்டும்தானா, கூட்டணி ஆட்சியுமா? - அமித் ஷா பேச்சுக்கு இபிஎஸ் ‘புதிய’ விளக்கம்

சென்னை: “பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று அமித் ஷா கூறவில்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து இன்று (புதன்கிழமை) அதிமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு ஏன் என்று விளக்கிப் பேசினார். தொடர்ந்து அவரிடம் பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டது. அதில் கூட்டணி தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக - அதிமுக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்றே உள்துறை அமைச்சர் அமித் ஷா சொன்னார். மீண்டும் அவர் தெளிவுபட டெல்லியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைகிறது என்று கூறினார். கூட்டணி என்று தான் சொன்னாரே தவிர கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. நீங்களாகவே ஏதாவது பொருள் தேடாதீர்கள்” என்று கூறினார்.

அமித் ஷா பேசியது என்ன? - கடந்த 11-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா கூறும்போது, “பாஜக தலை​வர்​களும், அதி​முக தலை​வர்​களும் இணைந்து கூட்​ட​ணியை உரு​வாக்கி இருக்​கிறோம். வரும் 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலை தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) கட்​சிகளு​டன் இணைந்து சந்​திக்க இருக்​கிறோம். வரும் தேர்​தலின் போது தேசிய அளவில் பிரதமர் மோடி தலை​மை​யிலும், தமிழகத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யிலும் போட்​டி​யிட இருக்​கிறோம்.

வரப்போகும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக - அ​தி​முக​வின் தேசிய ஜனநாயக கூட்​டணி பெரும்​பான்​மை​யான வாக்​கு​களை பெற்று ஆட்​சி​யமைக்​கும் என்​ப​தில் எனக்கு முழு நம்​பிக்கை இருக்​கிறது. பாஜக​வும், அதி​முக​வும் இணைந்துதான் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சியமைக்​கப் போகிறோம். அதி​முக பொதுச் ​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில்தான் கூட்​டணி இருக்​கும்.

அமைச்​சரவை குறித்து வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்​யப்​படும். எங்​களு​டன் கூட்​ட​ணி​யில் இணைந்​ததற்கு அதி​முக எந்​த​வித கோரிக்​கை​யும், நிபந்​தனை​யும் விதிக்​க​வில்​லை. அதி​முக​வின் உட்​கட்சி விவ​காரத்​தில் பாஜக​வின் தலை​யீடு ஒரு​போதும் இருக்​காது. கூட்​ட​ணி​யில் இணைவதன் மூலம் இருதரப்​புக்​குமே பலனிருக்​கிறது. யார் யாருக்கு எத்​தனை தொகு​தி​கள் என்​பதும், வெற்றி பெற்ற பிறகு ஆட்​சி​யில் எத்​தகைய பங்கு என்​பதும் பின்​னர்தான் பேசப்​படும்” என்று அமித் ஷா பேசியிருந்தார்.

கூட்டணி மட்டும்தான்; கூட்டணி ஆட்சியில்லை... இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், “கூட்டணி என்று அமித் ஷா சொல்லவே இல்லை. நீங்கள் ஏதேதோ வித்தை காட்டுகிறீர்கள். பாஜக - அதிமுக கூட்டணி, ஆட்சி அமைக்கும் என்றார். நீங்களாகவே ஏதாவது வார்த்தைகளைப் பிடுங்கி விறுவிறுப்பான செய்தியைத் தேடுகிறீர்கள். உங்கள் விஞ்ஞான மூளையைப் பயன்படுத்தாதீர்கள். அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள்ளதாகவே இவ்வாறு குழப்பம் ஏற்பட்டுள்ளது கவனம் பெறுகிறது. மேலும் வரும் 2-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டமும் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x