Published : 12 Apr 2025 06:46 AM
Last Updated : 12 Apr 2025 06:46 AM
சென்னை: ‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகத்தில் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தி முக்கிய முடிவுகளை அறிவிக்கும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். டெல்லியில் இருந்து புறப்பட்டு இரவு 11.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித் ஷா ஓய்வெடுத்தார்.
தமிழகத்தில் கட்சி நிலவரம் குறித்து மூத்த தலைவர்கள், நிர்வாகிகளுடன் அமித் ஷா நேற்று காலை ஆலோசனை நடத்தினார். பின்னர், மயிலாப்பூரில் உள்ள ‘துக்ளக்’ ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைப்பது, பாஜகவின் தேர்தல் வியூகம், அதிமுக உடனான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர். அதிமுகவில் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, கட்சியை ஒருங்கிணைத்து வலுப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும் என குருமூர்த்திதெரிவித்ததாக கூறப்படுகிறது.
திமுகவின் ஊழல், மோசடிகள், மாநில சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஆகியவற்றை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது குறித்தும் ஆலோசித்தனர். பின்னர், குருமூர்த்தியின் வீட்டில் இருந்து,அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் தொலை பேசியில் அமித் ஷா பேசியதாக தெரிகிறது.
குறைந்தபட்ச செயல் திட்டம்: இதையடுத்து, கிண்டி நட்சத்திர ஓட்டலில் அமித் ஷாவை, பழனிசாமி சந்தித்து, கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, அதிமுக தலைமையில் தேர்தலை சந்திப்பது, கூட்டணி ஆட்சி அமைப்பது, குறைந்தபட்ச செயல்திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமையில் பாஜக – அதிமுக கூட்டணிஉறுதியானதை, செய்தியாளர்கள் முன்னிலையில் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ‘‘பாஜக, அதிமுக தலைவர்கள் இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளோம். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று அவர் கூறினார்.
இபிஎஸ் வீட்டில் தேநீர் விருந்து: பின்னர், பழனிசாமி அழைப்பை ஏற்று, அவரது வீட்டில் நடைபெற்றதேநீர் விருந்தில் அமித் ஷா கலந்துகொண்டார். அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர். அங்கு பழனிசாமி, அமித் ஷா ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவே அமித் ஷா டெல்லி புறப்பட்டு சென்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...