Published : 09 Apr 2025 03:57 PM
Last Updated : 09 Apr 2025 03:57 PM
சென்னை: பிரதமரின் சூரிய வீடு இலவச மின்திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை உதவிப் பொறியாளருக்கு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க, பிரதமரின் சூரிய வீடு இலவச மின்திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், 5 கிலோவாட் திறனில் மின்நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், அதற்கு மேல் அமைத்தால் ரூ.78 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. மின்நிலையம் அமைக்க மத்திய அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உற்பத்தியாகும் மின்சாரத்தை உரிமையாளர் பயன்படுத்தியது போக, எஞ்சிய மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்கலாம்.
எனவே, மின்நிலையம் அமைப்பதற்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறு மற்றும் பாதுகாப்பு சான்றுக்கு மின்வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 10 கிலோவாட் வரை சூரியசக்தி மின்நிலையம் அமைக்க சாத்தியக் கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து மின்வாரியம் ஏற்கனவே விலக்கு அளித்து விட்டது. பாதுகாப்பு சான்று வழங்கும் அதிகாரம் உதவி செயற்பொறியாளரிடம் உள்ளது. நான்கு பிரிவு அலுவலகங்களுக்கு தலா ஒரு உதவி செயற்பொறியாளர் உள்ளனர்.
இதனால், சூரியசக்தி மின்நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சான்று வழங்குவதற்கான அதிகாரத்தை பிரிவு அலுவலக உதவி பொறியாளருக்கு வழங்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், விரைவாக ஆய்வு செய்து பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்பதால், மின்நிலையம் அமைக்கும் பணிகளும் வேகமெடுக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment