Published : 07 Apr 2025 04:44 PM
Last Updated : 07 Apr 2025 04:44 PM

ஞானசேகரனை விடுவிக்கக் கூடாது: மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு 

சென்னை: ‘அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது’ என தமிழக அரசு தரப்பில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், “எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே, இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்,” என்று ஞானசேகரன் தரப்பில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு பொறுப்பு மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக இன்று (ஏப்.7) விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானசேகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய முகாந்திரங்கள் உள்ளன.

இவர்தான் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளன. எனவே, ஞானசேகரனை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது. இது தொடர்பாக ஞானசேகரன் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்.8) தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x