Published : 07 Apr 2025 06:39 AM
Last Updated : 07 Apr 2025 06:39 AM

தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது

சென்னை: தெற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 7-ம் தேதி (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

தென்தமிழக பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் 7 செ.மீ., சுருளக்கோடில் 6 செ.மீ., பேச்சிப்பாறை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x