Published : 07 Apr 2025 12:42 AM
Last Updated : 07 Apr 2025 12:42 AM
சென்னை: பனகல்பூங்கா - கோடம்பாக்கம் இடையேயான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியை வரும் செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-வது வழித்தடம் முக்கியமானதாக இருக்கிறது. இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இத்தடத்தில் ஒரு பகுதியான பனகல் பூங்கா - கோடம்பாக்கம் இடையே சுரங்கப்பாதை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்தடத்தில் "பெலிகன்" என்னும் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை பயன்படுத்தி, பூமியில் இருந்து 18 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜன.31-ம் தேதி தொடங்கியது.
இப்பாதையில் களிமண்ணை வெளியேற்றுவது, அடுக்குமாடி குடியிருப்புகள் அருகே சுரங்கம் தோண்டும் இயந்திரத்தை இயக்குவது உள்பட பல்வேறு சவால்கள் காரணமாக, சுரங்கப்பாதை பணி மெதுவாக நகர்ந்தது. கடந்த மாதம் "பெலிகன்" சுரங்கம் தோண்டும் இயந்திரம் 1.3 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்தது. அதாவது, இந்த இயந்திரம் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை அடைந்தது. மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரமான "பிகாக்" விரைவில் இலக்கை அடையவுள்ளது.
இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பனகல்பூங்கா - கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வரை 2.063 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணி மேற்கொள்ள வேண்டும். இதில், பனகல்பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் வரை சுரங்கப்பாதை நீளம் 1.155 கி.மீ. ஆகும். ஒரு ஆண்டுக்கு பிறகு, பனகல் பூங்காவிலிருந்து சுரங்கம் தோண்டும் (பெலிகன்) இயந்திரம் கோடம்பாக்கம் நிலையத்தை கடந்த மாதம் வந்தடைந்தது.
அதாவது 1.3 கி.மீ. சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்தது. இதற்கு பின்னால், பிகாக் சுரங்கம் தோண்டும் இயந்திரம் விரைவில் பணியை நிறைவு செய்ய உள்ளது. மொத்தம் 2.5 கி.மீ. இருமார்க்கமாக நிறைவடைந்துள்ளது. அனைத்து பணிகளும் செப்டம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment