Published : 06 Apr 2025 03:59 PM
Last Updated : 06 Apr 2025 03:59 PM
ராமேஸ்வரம்: பாம்பனில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஓர் பொறியியல் அற்புதம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இன்று (ஏப்.6) பிரதமர் நரேந்திர மோடி, கடலில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.
“இன்று ராம நவமி. இதே நாளில் தான் நமது பிரதமர் நரேந்திர மோடி, பாம்பன் பாலத்தை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இந்த நாள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு நமது நினைவுகளில் இருக்கும். இந்தியாவை வளர்ந்து தேசமாக மாற்றும் பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
பாம்பன் பாலம் ஒரு பொறியியல் அதிசயம். நமது நாட்டில் கடலில் அமைந்துள்ள முதல் செங்குத்து தூக்கு பாலம். தமிழ் கலாச்சாரத்தில் பாம்பன் பாலம் ஒரு முத்து. பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு அதிக முக்கியத்துவமும் மரியாதையும் தருகிறார்.
தமிழகத்தில் ராமேஸ்வரம் உட்பட 77 ரயில் நிலையங்களில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் ராமேஸ்வரம் ரயில் நிலையம் அழகான வகையில் கட்டமைக்கப்படுகிறது. வரும் டிசம்பரில் இதன் பணிகள் நிறைவு பெறும். ரயில்வே துறை சார்ந்து பல்வேறு பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. புதிய வழித்தடங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, தமிழகத்துக்கு 8 புதிய வந்தே பாரத் ரயில்களை அளித்துள்ளார்.” என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...