Published : 06 Apr 2025 07:04 AM
Last Updated : 06 Apr 2025 07:04 AM

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்று சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 7 முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப். 5-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 19 செ.மீ., ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், திருப்பூர் ஆகிய இடங்களில் 15 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் 13 செ.மீ., திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 12 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டை மேடு, திருப்பூர் தெற்கு ஆகிய இடங்களில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x