Published : 06 Apr 2025 12:28 AM
Last Updated : 06 Apr 2025 12:28 AM

ஊட்டியில் இன்று 15,000 பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனையில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிவுதளத்தை திடப்படுத்தும் பணிகளை நேற்று ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆ.ராசா எம்.பி. உள்ளிட்டோர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஊட்டியில் நடக்கும் அரசு விழாவில், 15 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அந்தவகையில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் நேற்று ஊட்டிக்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று இரவு ஊட்டியில் உள்ள நட்சத்திர ஹோடலில் திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இன்று காலை 10 மணிக்கு புதிதாக ரூ.464 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வருகிறார். அங்கு ரூ.494.51 கோடி மதிப்பில் முடிவுற்ற 1,703 திட்டப் பணிகளைத் திறந்துவைக்கிறார். மேலும், ரூ.130.35 கோடி மதிப்பில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், 15 ஆயிரத்து 634 பயணாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

இந்த விழாக்களில் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மு.பெ.சாமிநாதன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஊட்டி வரும் முதல்வரை பல இடங்ளில் பழங்குடியின மக்கள், படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்க உள்ளனர். முதல்வர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x