Published : 06 Apr 2025 12:19 AM
Last Updated : 06 Apr 2025 12:19 AM
சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் அருகே சிறுபான்மையினர் அரசு உதவிபெறும் பள்ளியில், பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்ட பஷீர் என்பவரின் நியமனத்தை, அவர் டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாததால் அங்கீகரிக்க மறுத்து, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து, தான் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்கக் கோரி, பஷீர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தனி நீதிபதி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கல்வித் துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு உத்தரவு பிறப்பித்தனர்.
அந்த உத்தரவில், "சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயம் செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ளது. தகுதிகளை நிர்ணயம் செய்ய என்சிடிஇ-யை கல்வி ஆணையமாக அரசு நியமித்துள்ளது. அது டிஇடி தேர்ச்சியை தகுதிகளில் ஒன்றாக நிர்ணயித்துள்ளது.
எனவே, டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறும் தகுதி, சிறுபான்மை நிறுவனங்கள் உட்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த வழக்கில், விண்ணப்பதாரர் டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறாததால் அவரது நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது. டிஇடி தேர்வில் தேர்ச்சி தகுதி அடிப்படையில் ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி மறுத்து கல்வித் துறை பிறப்பித்த உத்தரவு செல்லுபடியாகும். எனவே, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment