Published : 05 Apr 2025 01:30 PM
Last Updated : 05 Apr 2025 01:30 PM

''திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராஜர் பெயர்'' - வாசன் வலியுறுத்தல்

சென்னை: திருத்தணி காய்கறி மார்க்கெட்டுக்கு மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் பெயரையே சூட்ட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, மா.பொ.சி சாலையில் ஐம்பது ஆண்டுகாலமாக காமராஜர் பெயரில் இயங்கி வந்த காய்கறி மார்கெட் புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது திறக்கும் தருவாயில் பெருந்தலைவர் பெயரில்லாமல் திறக்கவுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவந்த "காமராஜர் மார்க்கெட் சேதம் அடைந்த நிலையில் தற்பொழுது திருத்தணி நகராட்சியின் சார்பில் புதிப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக கட்டப்பட்ட கட்டத்திற்கு காமராஜர் பெயருக்குப் பதில் வேறு பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக அறிந்து கடந்த மாதம் 03.03.2025 அன்று தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதனை ஏற்று கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி திருத்தணி நகராட்சி நிர்வாக இயக்குனர் புதுப்பிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள மார்கெட் பெருந்தலைவர் காமராஜர் பெயரிலேயே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இச்செய்தி பல்வேறு பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

தற்பொழுது திருத்தணி மாநகராட்சியின் சார்பில் வருகிற 09.04.2025 ம.பொ.சி சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடியை பெருந்தலைவர் பெயரிப்படாமல் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரால் திறக்கப்படவுள்ளதாக செய்தி வந்துள்ளது.

நாட்டிற்காக தன் வாழ்நாளையே அர்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் பெயருக்கும் புகழுக்கும் இது கலங்கம் ஏற்படுத்துகிறது. இது மிகவும் வருந்ததக்கது. பெருந்தலைவர் காமராஜர் பெயரையே மீண்டும் சூட்டவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x