Published : 04 Apr 2025 06:13 PM
Last Updated : 04 Apr 2025 06:13 PM
ராமேசுவரம்: பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின் போது சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி , இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்ட், பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், அந்தோணி சீசரியன், முத்துகளங்கியம், கிறிஸ்துராஜாஆகிய 11மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மீனவர்களின் வழக்கு வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவர்களின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர்.
ஊர்காவல் துறை நீதிபதி நளினி சுபாஸ்கரன் மீனவர்கள் 11 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 11 பேரை தண்டனை மற்றும் அபதராமின்றி விடுதலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...