Published : 01 Apr 2025 04:22 AM
Last Updated : 01 Apr 2025 04:22 AM
சென்னை: தமிழகத்தை பல வழிகளிலும் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதால் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழகத்தையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது. இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழக மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழத்துக்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரிப்பது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுகிறது.
தமிழகத்தில் இருந்து அதிகமான ஜி.எஸ்.டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது, பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடி கொடுப்பது, சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைப்பது, இத்திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு.
இதுபோன்ற காரணங்களால் தமிழத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment