Last Updated : 31 Mar, 2025 02:49 PM

 

Published : 31 Mar 2025 02:49 PM
Last Updated : 31 Mar 2025 02:49 PM

660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் முடிவு

கோப்புப்படம்

சென்னை: அதிகரித்து வரும் மின்தேவையை சமாளிக்க, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: “தமிழகத்தில் ஆண்டுதோறும் 10 சதவீதம் மின்தேவை அதிகரித்து வருகிறது. இதன்படி, அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தனது சொந்த உற்பத்தியை தவிர, மத்திய தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வரப்படுகிறது.

எனினும், சொந்த உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு செயல்படுத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனம் பணியை தாமதமாக மேற்கொண்டதால் 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர், எஞ்சிய பணியை மேற்கொள்ள 2022-ம் ஆண்டு மற்றொரு நிறுவனத்துக்கு ரூ.4,442 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமும் பணியை தாமதமாக மேற்கொண்டதால், கடந்த ஆண்டு அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்னுற்பத்தி விரிவாக்க திட்டத்தை மின்வாரியமே செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக, சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும், அடுத்தக் கட்டமாக பணிகள் தொடங்கப்படும். மின்வாரியம் தற்போது சொந்தமாக 4,320 மெகாவாட் அனல் மின்னுற்பத்தியை செய்வதற்கான உற்பத்தி நிலையத்தைக் கொண்டுள்ளது”, என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x